சென்னை, தாம்பரம் சாலைகளில் ஓடும் ஒகேனக்கல் பரிசல்கள்... மீட்புப்பணி தீவிரம்
சென்னை: பேருந்துகளும், கார்களும் ஓடிய சென்னை சாலைகளில் இப்போது படகுகள்தான் ஓடுகின்றன. சென்னை தாம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை ஒகேனக்கல்லிருந்து கொண்டு வரப்பட்ட 72 பரிசல்கள் மூலமும் நடைபெற்று வருகிறது.
வரலாறு காணாத கனமழையால் சென்னை நகரமும், தாம்பரம், முடிச்சூர் என பல பகுதிகளும் சிறு சிறு தீவுகளாக மாறியுள்ளன. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
சென்னையில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்திலிருந்து மக்களை மீட்பதற்காக, ஒகேனக்கல்லில் இருந்து 72 பரிசல்களுடன் பரிசல் ஓட்டிகள் வந்துள்ளனர்.
ஒகேனக்கல்லில் தற்போது பரிசல் பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை அரசியல் கட்சியினரும் தொடங்கியுள்ளனர்.
அவதியில் மக்கள்
சென்னையின் புறநகர் பகுதிகளான மேற்கு தாம்பரம், முடிச்சூர் ரோடு, கிருஷ்ணா நகர், ஸ்ரீராம் நகர், லஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக மழை வெள்ளம் சூழ்ந்த நிலையில் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். மின்சாரம் தடைபட்ட நிலையில் குடிநீர், உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர்.
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) December 3, 2015 |
பரிசல்கள் வருகை
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி லோக்சபா எம்.பி அன்புமணி ராமதாஸ் ஏற்பாட்டில் புதன்கிழமை காலையிலேயே 15 பரிசல்களும் பரிசல் ஓட்டிகளும் சென்னைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக தரப்பில் இருந்து ஒகேனக்கல் பகுதியிலிருந்து பரிசல்கள் சென்னைக்குப் புறப்பட்டன. வியாழக்கிழமை பிற்பகல் வரை ஒகேனக்கல்லில் இருந்து 72 பரிசல்களும், 72 பரிசல் ஓட்டிகளும் அழைத்து வரப்பட்டனர்.
பரிசல்களில் மீட்புப்பணி
வெள்ளத்தில் சிக்கித் தவித்த மக்களை ஒகேனக்கல் பகுதியில் இருந்து கொண்டவரப்பட்ட பரிசல்கள் மூலம் மீட்புக் குழுவினரும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திரும்புவது எப்போது
வாழ்வாதாரத்தை தொலைத்து விட்டு வெள்ளத்தில் சிக்கித்தவித்த மக்களுக்கு வெளியேற வழி கிடைத்து விட்டது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள இந்த மக்களோ தாங்கள் இழந்த பொருட்கள் கிடைக்குமா? உணவு குடிநீருக்கு என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கியுள்ளனர் மக்கள்.