நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதல்வர் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்: ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை : நீட் தேர்விலிருந்து விலக்கு பெற சட்டத்தில் இடம் உண்டு. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உண்ணாவிரதம் இருந்து தனது எதிர்ப்பை காட்ட வேண்டும் என்று முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் கோரிக்கை விடுத்துள்ளார்.
நீட் தேர்வு மூலம் மருத்துவ சேர்க்கை என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் கிடைத்தும் மருத்துவம் பயில முடியாத விரக்தியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துக் கொண்டார்.

இதனால் கிட்டதட்ட ஒரு வார காலத்துக்கு தமிழகத்தில் மத்திய- மாநில அரசுகளை கண்டித்து மாணவர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் இயக்குநர் பா.ரஞ்சித் ஏற்பாடு செய்த கல்வி முன் உள்ள சவால்கள் என்ற பெயரிலான தேசிய அளவிலான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன் கூறுகையில், எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் ஜெயலலிதா சமாதியில் உட்கார்ந்து கொண்டு நீட்டுக்கு விலக்கு அளிக்கும் வரை போராட வேண்டும்.
அவ்வாறு போராடினால் எதிர்கட்சியினரும், நாங்களும், இளைஞர்களும் மெரினாவில் நிச்சயம் போராடுவோம்.இதன் மூலம் மிகப் பெரிய எழுச்சியை உண்டாக்கி நீட் தேர்வை துரத்தலாம். பொது பட்டியலில் இருந்து கல்வி இன்னும் நீக்கப்படவில்லை. எனவே நீட் தேர்விலிருந்து தமிழகம் விலக்கு பெற சட்டத்தில் இடம் உள்ளது என்றார்.
அப்போது பேசிய பா.ரஞ்சித் நீட் தேர்வால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி பிரதமர் நரேந்திர மோடியை விரைவில் சந்தித்து வலியுறுத்துவேன் என்றார்.












Click it and Unblock the Notifications