அறிவிப்பு இல்லாத திடீர் மின்வெட்டு - நெல்லையில் அரிசி ஆலைகள் முடக்கம்
நெல்லை: திடீரென அறிவிக்கப்படாத மின்வெட்டு தலை தூக்கியுள்ளதால், நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் முடங்கியுள்ளன.
தமிழகத்தில் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் வி்ளையும் நெற்கள், நெல்லை மாவட்டம் கீழப்பாவூர் கொண்டு வரப்பட்டு அரிசியாக்கப் படுகின்றன. பின்னர் இந்த அரிசி தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.
கீழப்பாவூர் வட்டாரத்தில் இந்த தொழிலை நம்பி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டால் அரிசி ஆலைகள் தொடர்ச்சியாக இயங்க முடியாமல் திணறி வருகின்றன. இதனால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நெல் அவித்து காய வைப்பதற்காக பயன்படும் டிரையர் என்னும் கருவி தொடர்ச்சியாக மின்சாரம் இருந்தால் மட்டுமே இயங்கும். நெல்லை உள்ளே செலுத்தி அது வெந்து வெளிவரும் வரை மின்சாரம் தொடர்ச்சியாக இருந்தால் தான் உரி்மையாளருக்கு நஷ்டம் வராது. இல்லாவிட்டால் மொத்த நெல்லும் வீணாகி விடும்.
சில ஆலைகளில் ஜெனரேட்டர் வசதி இருக்கிறது. அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுவது இல்லை. ஆனால் சிறிய அளவிலான தொழில் நிறுவனங்கள் கடும் இழப்பை சந்தித்து வருகிறது. இப்பகுதியில் உள்ள அரிசி ஆலை உரிமையாளர்கள் பலர் கடன் பெற்று ஆலைகள் நிறுவியுள்ளனர்.
இந்த மின்தடையால் அவர்கள் முதலையும், வட்டியையும் கட்ட முடியாமல் திகைப்பில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சில பகுதிகளில் 6 மணி நேரத்திற்கும் மேலாக அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் அரிசி வியாபாரம் செய்து வந்த பலர் வேலையின்றி மாற்று தொழிலை நோக்கி சென்று வருகின்றனர்.