ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு..பதற்றமான வாக்குச் சாவடியில் பலத்த பாதுகாப்பு..
சென்னை : இடைதேர்தல் நடைபெற உள்ள ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு, மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் அதனைச் சார்ந்த உபகரணங்கள், பொருட்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன், டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
ஆர்.கே.நகரில் மொத்தம் 238 வாக்குச்சாவடிகளும், 49 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.அனைத்து மையங்களிலும் மைக்ரோ அப்சர்வர்கள் பணியமர்த்தப்பட்டு வாக்குப்பதிவை கண்காணிக்க உள்ளனர்.
இதுதவிர வாக்குப்பதிவு மையங்களில் வெப்கேமரா பொருத்தப்பட்டு தலைமை அலுவலகத்திலிருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 250 கேமராமேன்கள் தயார் நிலையில் உள்ளனர். மேலும் அரசு கேபிள் டிவி மூலம் வாக்குப்பதிவை நேரடி ஒளிபரப்பு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவை முன்னிட்டு துணை ராணுவம், வெளியூர் போலீசார் என சுமார் 1,000 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆர்.கே.நகரில் 38 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, அங்கு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
இன்று பதிவாகும் வாக்குகள் வரும் 30ம் தேதி எண்ணப்பபட்டு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
முன்னதாக இடைத்தேர்தல் பாதுகாப்பு குறித்து நேற்று மாலை காவல் ஆணையர் ஜார்ஜ், மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விக்ரம் கபூர், மத்திய தேர்தல் பொது பார்வையாளர் ஜோதிகலாஷ் ஆகியோர் தலைமையில் காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கு பெற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் வாக்குப்பதிவு மையங்களுக்கு அளிக்கப்படவுள்ள பாதுகாப்பு, அரசியல் கட்சியினரை கண்காணிப்பது, விதிமுறை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.