தோசை வட்டமா சுடணும்... சுட்டு காட்டி தாமரைக்கு வாக்கு கேட்கும் கரு. நாகராஜன்
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு.நாகராஜன் வாக்கு சேகரிப்பது படு சுவாரஸ்யமாக உள்ளது.
சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் கரு. நாகராஜன், ஒரு ஆள் விடாமல் தாமரையை காட்டி வாக்கு சேகரித்து வருகிறார். தோசை சுடும் பெண்மணியிடம் தோசை சுட்டு காட்டி வாக்கு சேகரித்தார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களம் களைகட்டியுள்ளது. திமுக, அதிமுக, பாஜக,நாம் தமிழர் கட்சி, தினகரன் என 5 முனை போட்டி நிலவினாலும் 59 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பாஜக வேட்பாளர் யார் என்று கடந்த சனிக்கிழமைதான் முடிவானது. என்றாலும் தனது முகத்தை மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் படாத பாடு படுகிறார் கரு. நாகராஜன்.
கவனத்தைக் கவரும் பாஜக திட்டம்
ஆர்.கே.நகரில் பாஜகவுக்கென யாரும் இல்லாததால் அவர்கள் பிரச்சாரத்துக்கு வெளியூர் நபர்களையே நம்பியுள்ளனர். நாங்கள் தனித்து விடப்படவில்லை என்று தமிழிசை சவுந்தராஜன் கூறினாலும் மக்களின் கவனத்தை கவர நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்.
வட்டமாக தோசை சுடணும்
வேட்பாளர் கரு. நாகராஜன் அதிக நம்பிக்கையோடு தொகுதிக்குள் வலம் வருகிறார். தெருவோரத்தில் தோசை சுட்டு விற்கும் பெண்மணியின் அருகில் அமர்ந்து, அக்கா... இங்கே கொடுங்க என்று கரண்டியை வாங்கி தோசையை வட்டமாக சுடணும் என்று சுட்டுக்காட்டி வாக்கு சேகரித்தார்.
மறக்காம தாமரைக்கு போடுங்க
கையில் தாமரை சின்னம்... தோள் மீது பாஜகவின் கட்சி நிறம் கொண்ட துண்டு என அசத்தலாக வலம் வருகின்றனர் பாஜகவினர். டீ கடைசியில் டீ குடிக்கும் போது கூட விடாமல் வாக்கு சேகரிப்பது சுவாரஸ்யம். ஏதோ எங்களால முடிஞ்சது... 2 ஓட்டு கன்பார்ம் பண்ணிட்டோம்ல என்று கூறி வலம் வருகின்றனர் தொண்டர்கள்.
கருத்துக்கணிப்பு சரியில்லையே
பாஜகவிற்கு எதிராகவே கருத்துக்கணிப்பு இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் போதே ஸ்ரீ ரங்கத்தில் வேட்பாளரை நிறுத்தி சில ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றது பாஜக. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் தைரியமாக வேட்பாளரை களமிறக்கியுள்ளனர். இந்த தேர்தலில் விழப்போகும் வாக்குகள்தான் பாஜக தமிழகத்தில் கையை ஊன்றுமா? விரலை ஊன்றுமா என்று தெரியவரும்.