ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்- நாளை வாக்குப்பதிவு! 230 மையங்களில் பலத்த பாதுகாப்பு!!
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் நாளை காலை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவு நடைபெறும் 230 மையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அண்ணா தி.மு.க. வேட்பாளராக முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மகேந்திரன், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உட்பட 28 பேர் களத்தில் உள்ளனர்.
ஜெயலலிதாவை ஆதரித்து அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை கடந்த மே 31-ந் தேதி முதல் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் சி.மகேந்திரனை ஆதரித்து கடந்த 10-ந்தேதி முதல் இடதுசாரிகள் பிரசாரத்தில் ஈடுபட்டனர். சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்பட களத்தில் உள்ள 26 சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் பாணியில் பிரசாரம் மேற்கொண்டனர்.
வெளியூர் நபர்கள் வெளியேற்றம்
இந்த பிரசாரம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு தொகுதியை சேராதவர்கள் வெளியேற வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டிருந்தார். அதன்பேரில், ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று மாலை 5 மணியுடன் பிரசாரம் முடிவடைந்ததையடுத்து தொகுதியில் முகாமிட்டிருந்த வெளியூரை சேர்ந்தவர்களும் வெளியேற்றப்பட்டனர்.
நாளை வாக்குப் பதிவு
இத்தொகுதியில் உள்ள 230 வாக்குச்சாவடி மையங்களில் நாளை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. நாளை பதிவாகும் வாக்குகள் வரும் 30-ந்தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவு அறிவிக்கப்படும். தேர்தல் வாக்குப்பதிவு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள 1,205 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று வாக்குச்சாவடி மையங்கள் ஒதுக்கும் பணி நடைபெற உள்ளது.
துணை ராணுவம்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 10 கம்பெனி துணை ராணுவ படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்கள் கடந்த சில நாட்களாக உள்ளூர் போலீசார், தேர்தல் பறக்கும் படையினருடன் இணைந்து வாகன சோதனை, தேர்தல் விதிமுறைகள் மீறப்படுகிறதா? என்பது குறித்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடி அணிவகுப்பு
மேலும் பிரசாரம் ஓய்ந்த நிலையில் துணை ராணுவ படை வீரர்கள் துப்பாக்கி ஏந்தியபடி ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பேண்டு-வாந்தியம் இசை முழங்க பாதுகாப்பு அடையாள அணிவகுப்பு நடத்தினர்.
காசிமேடு எம்.ஜி.ஆர்.சிலை, வண்ணாரப்பேட்டை சுங்கச்சாவடி பஸ் நிலையம், கொடுங்கையூர் எழில் நகர் ஆகிய 3 இடங்களில் இருந்து தனித்தனியாக புறப்பட்ட அணிவகுப்பு பேரணி தண்டையார்ப்பேட்டை மண்டல அலுவலகம் அருகே நிறைவடைந்தது. துணை ராணுவ படையினருடன் உள்ளூர் போலீசார் 900 பேரும் அடையாள அணிவகுப்பில் கலந்துகொண்டனர்.