2011 முதல் நடைபெற்ற தேர்தலில் இந்த முறை தான் அதிக வாக்குப்பதிவு... மக்களின் விரக்தி வெளிப்பாடா?
கடந்த 7 ஆண்டுகளாக நடைபெற்ற தேர்தல்களில் இந்த முறை தான் ஆர்கே நகரில் அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
சென்னை : சென்னை ராதாகிருஷ்ணன் நகர் இடைத்தேர்தலில் கடந்த 7 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத வகையில் 77.68 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வழக்கமாக கடந்த தேர்தல்களை விட அதிக வாக்குகள் பதிவானால் அது எதிர்க்கட்சிக்கான வாய்ப்பாக பார்க்கப்படும் ஆனால் இந்த முறை மக்கள் ஒருவேளை ஆட்சியின் மீதான எதிர்ப்பாக வாக்களித்திருந்தாலும் அந்த வாக்கு தினகரனுக்கு சென்றதா, திமுக வேட்பாளர் மருதுகணேஷிற்கா என்பது கேள்விக் குறியாக உள்ளது.
சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி மொத்தம் 2.60 லட்சம் வாக்காளர்களைக் கொண்ட இந்த தொகுதியில் வாக்களித்த 1.78 லட்சம் மக்கள் தான் எதிர்கால அரசியலை தீர்மானிக்கும் சக்திகளாக பார்க்கப்படுகின்றனர். சுமார் 90 ஆயிரம் பேர் வாக்களிக்காத நிலையில் கடந்த 21ம் தேதி நடந்து முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.
7 மாநகராட்சி வார்டுகளைக் கொண்ட ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் 1977ம் ஆண்டு சென்னையில் அனைத்து தொகுதியிலும் திமுக வென்ற போதும், இந்த தொகுதியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. ஆர்கே நகர் தொகுதி மக்களைப் பொறுத்தமட்டில் தீவிர எம்ஜிஆர் ஆதரவாளர்கள். இதன் காரணமாகவே அதிமுக இந்த தொகுதியில் அசைக்க முடியாத சக்தியாக இருக்கிறது.
2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்துள்ளன. 2014 மக்களவைத் தேர்தலில் 65.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. 2015 இடைத்தேர்தலில் 74.59 சதவீத வாக்குகளும், 2016 தேர்தலில் 67.69 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. இந்நிலையில் 2017ம் ஆண்டு நடைபெற்றுள்ள இடைத்தேர்தலில் 77.68 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன.
வழக்கத்தை விட இந்த 7 ஆண்டு தேர்தல் வரலாற்றில் இந்த இடைத்தேர்தலில் தான் 77 சதவீதத்தை கடந்து வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது ஆளும் கட்சிக்கு எதிரான வாக்குகளா என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் தொடக்கம் முதலே தினகரனுக்கு தொகுதியில் மகளிரின் செல்வாக்கு உள்ளது. இதே போன்று இந்த முறை வாக்குப்பதிவிலும் பெண்களின் வாக்குகளே அதிகம் என்பதால் தினகரனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.