அலட்சியத்தில் இருந்து சுதாரிக்காவிட்டால்... திமுகவுக்கு வார்னிங் பெல் அடிக்கும் ஆர்.கே.நகர்
அலட்சியமாக இருந்த திமுகவுக்கு ஆர்கே நகர் தக்க பாடத்தை தந்துவிட்டது.
Recommended Video
சென்னை: ஆளும் கட்சி உடைந்து கிடக்கிறது... இனி எல்லாமே நம் வசம் என்கிற அலட்சியப் போக்கை திமுக தொடர்ந்து கடைபிடித்தார் ஆர்கே நகர் நிலைமைதான் அடுத்தடுத்த தேர்தல்களிலும் அரங்கேறும் என்கிற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.
திமுகவின் பரம வைரியாக இருந்து அதிமுகவை வழிநடத்தியவர் ஜெயலலிதா. 1984-ம் ஆண்டுக்குப் பின் தமிழகத்தில் அதிமுகவை தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்தியவர் ஜெயலலிதா.
அவரது திடீர் மறைவு ஒட்டுமொத்த அதிமுகவையும் சுக்கு நூறாக சிதைத்தது. அதிமுக உடைந்தது; சின்னம் முடங்கியது; டெல்லியின் பிடியில் ஆளும் அரசு சிக்கியது.
இதனால் எதிரியே இல்லாத களத்தில் நிற்பது போன்ற மகிழ்ச்சியில் திமுக திளைத்தது. என்ன நடந்தாலும் திமுக ஆட்சிதான் அமையப் போகிறது; ஆர்கே நகரிலும் நாமே வெல்வோம் என நமக்கு நாமே மணிமகுடம் சூட்டிக் கொண்டது அக்கட்சி.
அதனால்தான் ஆர்கே நகர் தேர்தல் களத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் சாதாரண தொண்டரான மருதுகணேஷை வேட்பாளராக களமிறக்கியது திமுக. ஆளும் அதிமுகவின் வாக்குகள் பிரியும்; நமது வாக்குகளே நாம் வெல்ல போதும் என கணக்குப் போட்டது திமுக.
அதுவும் தற்போதைய தேர்தலில் மதிமுக, இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி என விலகிப் போன கட்சிகள் எல்லாம் வலிய வந்து திமுகவுக்கு ஆதரவு தந்தன. இதனால் சுயேச்சை தினகரன், அதிமுகவின் பணபலத்தை நமது வாக்கு பலம் வெல்லும் என திடமாகவே திமுக நம்பியது.
ஆனால் பழுத்த திமுக, பணம் பத்தும் செய்யும் என்பதையும் சொந்த கட்சியினரே விலை போகிற நிலையையும் உணராமலும் அசால்ட்டாக இருந்ததால் ஆர்.கே.நகரில் அட்ராசிட்டியை தாங்கிக் கொள்ள வேண்டியதாக உள்ளது. இனியும் திமுக சுதாரிக்காமல் போனால் ஆர்.கே.நகர் நிலவரம் தமிழகம் முழுவதும் திமுகவுக்கு வந்துசேரும்!