சென்னை சாலைகளில் ஆள் விழுங்கும் ராட்சச பள்ளங்கள்... அச்சத்தில் வாகன ஓட்டிகள்
சென்னை: மழை வெள்ளத்தில் இருந்து மீண்ட சென்னைவாசிகளை இப்போது அச்சுறுத்திவருகிறது ஆங்காங்கே ஏற்பட்டுள்ள ஆள்விழுங்கும் மரணபள்ளங்கள். சென்னையில் நேற்று ஒரே நாளில் ஜி.என்.செட்டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை சாலை, ஆற்காடு சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் நேற்று பிற்பகலில் தண்ணீர் லாரி ஒன்று சென்றது. அப்போது ராஜமன்னார் சாலை சந்திப்பில் திடீரென 10 அடி நீளம், 5 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டு லாரியின் பின் சக்கரங்கள் சிக்கிக்கொண்டன. லாரியை வெளியே எடுக்க எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லை.
உடனடியாக மற்றொரு காலி டேங்கர் லாரி வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கிய லாரியின் டேங்கரில் இருந்த 6 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதற்கு மாற்றப்பட்டது. பின்னர் லாரியை பள்ளத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். அதன் பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்பி சரிசெய்தனர். அதன் பின்னரே அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.
கீழ்ப்பாக்கம் பள்ளம்
கீழ்ப்பாக்கம் ஈகா திரையரங்கம் எதிரே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நேற்று பிற்பகலில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. அதன் அருகிலேயே மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருவதால் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. மெட்ரோ ரயில் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பள்ளம் ஏற்பட்டது குறித்து ஆய்வு செய்தனர். பின்னர் மணல் கொட்டப்பட்டு தற்காலிகமாக அந்த பள்ளம் மூடப்பட்டது. இதனால் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சிக்கிய பேருந்து
மீண்டும் அப்பகுதியில் நேற்று ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதில், பாரிமுனை-கோயம்பேடு மாநகர பேருந்து ஒன்றின் சக்கரம் சிக்கிக்கொண்டது. ஆனால் டிரைவர் சாதுரியமாக பேருந்தை வெளியே எடுத்துவிட்டார். தொடர்ந்து அதே பகுதியில் 2 முறை பள்ளம் ஏற்பட்டதால் மெட்ரோ ரயில், மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து சாலையை சீரமைக்கும் பணியில் இறங்கினர். 9 மீட்டர் அளவுக்கு சாலை வெட்டப்பட்டு, புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. இதன் காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பச்சையப்பன் கல்லூரியில் இருந்து நியூ ஆவடி சாலை வழியாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டது.
வளசரவாக்கம் பள்ளம்
வளசரவாக்கம் கைகான்குப்பம் திருவள்ளுவர் சாலையில், நேற்று 10 அடி ஆழத்துக்கு ராட்சச பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டன. அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரண்டு லாரி மணல் மற்றும் கற்களை கொண்டு பள்ளத்தை அடைத்தனர்.
பள்ளம் உருவானது எப்படி?
கடந்த மாதம் பெய்த கனமழையால் சுமார் ஒரு மாதமாக தண்ணீர் தேங்கி இருந்தது. அதன் காரணமாக அந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டு இருக்கலாம், அல்லது சாலைக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாய் சேதமடைந்து ஏற்பட்டு இருக்கலாம் என்றனர். குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘நெசப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு செல்லும் குடிநீர் குழாய் உடையவில்லை. குழாய் பழுதடைந்திருந்தால் வெளியே வந்திருக்கும். திடீர் பள்ளத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினர்.
பீதியில் வாகன ஓட்டிகள்
கடந்த மாத இறுதியில் மயிலாப்பூரில் பல்வேறு இடங்களில் அடுத்தடுத்து ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டது. தேனாம்பேட்டையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி நடைபெறும் இடத்தில் கடந்த 1ம் தேதி பள்ளம் ஏற்பட்டது. மத்திய கைலாஷ், அண்ணாசாலை என போக்குவரத்து அதிகம் நிறைந்த பகுதிகளில் ஏற்படும் திடீர் பள்ளங்களால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர். பள்ளம் ஏற்படுவதற்கான காரணத்தை யாராவது விளக்கினால் மட்டுமே சென்னைவாசிகளின் அச்சம் நீங்கும்.