3 நாட்கள் விற்பனைத் தடை எதிரொலி... நேற்று ஒரே நாளில் ரூ.150 கோடிக்கு மது விற்பனை
சென்னை : தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நாளை மறுதினம் நடைபெறுவதையொட்டி இன்று முதல் மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு முன்னெசரிக்கையாக நேற்றே குடிமகன்கள் சரக்குகளை வாங்கி பதுக்கி வைத்து விட்டனர் போலும். இதனால் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ 150 கோடிக்கு மது விறபனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே கடந்த தமிழ்ப் புத்தாண்டு அன்று மட்டும் சுமார் ரூ 100 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மொத்தக் கடைகள்....
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 6 ஆயிரத்து 800 டாஸ்மாக் மதுபானக்கடைகள் உள்ளன. இங்கு சாதாரண நாட்களில் ரூ.57 கோடி முதல் ரூ.60 கோடி வரையும், அதுவே சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ரூ.70 கோடி முதல் ரூ.90 கோடி வரையும் மது விற்பனை நடைபெறுகிறது.
பண்டிகை நாட்கள்...
தீபாவளி, புத்தாண்டு, பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற பண்டிகைகளின் போது டாஸ்மாக் கடைகளில் விற்பனை கொஞ்சம் ஸ்பெஷலாகவே இருக்கும். அந்த வகையில், கடந்த 13-ந்தேதி மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருந்த நிலையிலும், மறுநாளான 14-ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு அன்று ரூ.100 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது.
விற்பனைத் தடை...
இந்நிலையில் நாளை மறுதினம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குபதிவை முன்னிட்டு பாதுகாப்பு அம்சங்களுக்காக மதுபானக் கடைகளுக்கும், பார்களுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள்...
இதனால் வழக்கத்திற்கு மாறாக நேற்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. தொண்டர்களுக்கு வழங்குவதற்காக கட்சிகளும், சாதாரண குடிமகன்களும் மதுவை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
பதுக்கலைத் தடுக்க நடவடிக்கை...
ஏற்கனவே மது பதுக்கலைத் தடுக்க தேர்தல் ஆணையமும், காவல் துறையும் தக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகச் சொல்லப் பட்டது. ஆனபோதும், நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ 150 கோடிக்கு மது விற்பனையாகி சாதனை புரிந்திருப்பதாகத் தெரிகிறது.
விற்பனையில் சாதனை...
கடந்த இரண்டு நாளில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் 3 லட்சம் மதுபெட்டிகள் விற்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று இது மேலும் சூடுபிடித்து சுமார் 4 லட்சம் மதுபான பெட்டிகளும், 2 லட்சத்து 11 ஆயிரம் பீர் பாட்டில் பெட்டிகளும் விற்பனையாகி உள்ளது.
விற்பனை இன்னும் அதிகரிக்கும்...
தேர்தலையொட்டி மதுவிற்பனையும் வழக்கத்தை விட 10 சதவீதம் கூடுதலாக விற்பனை ஆவதாக தெரிகிறது. தேர்தலை யொட்டி மூன்று நாட்கள் தடை முடிந்ததும் மீண்டும் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.