For Daily Alerts
Just In
பழைய 1000, 500 ரூபாய்கள் ரயில், விமான நிலையங்களில் நவ.15வரை செல்லும்
பெட்ரோல் நிலையங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருந்தகங்களில் இன்னும் மூன்று நாட்களுக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னை : 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் திடீரென செல்லாது என அறிவிக்கப்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 15 வரை இந்த பணத்தை அரசு மருத்துவமனைகள்,மத்திய எண்ணெய் நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பெட்ரோல் பங்குகள், ரயில் நிலையங்களில் மாற்ற மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது.
நவம்பர் 8ம் தேதி முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது எனவும் நவம்பர் 11 வரை அரசு மருத்துவமனைகள்,மத்திய எண்ணெய் நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற பெட்ரோல் பங்குகள்,பொதுப்போக்குவரத்து போன்ற குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த கால அவகாசம் இன்று நள்ளிரவுடன் முடிவடைய உள்ள நிலையில் , இந்த கால அவகாசத்தை மேலும் மூன்று நாட்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
- ரிசர்வ் வங்கிக் கிளைகள், தனியார், பொதுத் துறை மற்றும் கூட்டுறவு வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். 4,000 ரூபாய் வரை மாற்ற, எந்த வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தையும் அணுகலாம். அதற்கு மேல் தொகையை மாற்ற, கணக்கு வைத்துள்ள வங்கியை மட்டுமே அணுக வேண்டும்.
- இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால், அதற்கு முறையான கணக்கு இல்லாத பட்சத்தில் 200 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என நேற்று அரசு அறிவித்தது.
- வங்கிகளில் பணத்தை மாற்றச் செல்லும்போது, வாடிக்கையாளர்கள் பணத்தை மாற்றுவதற்கென ஒரு படிவத்தை பூர்த்திசெய்து அளிக்க வேண்டும்.
- 500, 1000 ரூபாய் நோட்டுகள் எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் வங்கிகள், அஞ்சல் நிலையங்களில் அவற்றைக் கொடுத்து அதே மதிப்புள்ள வேறு ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். ஆனால் 4,000 ரூபாய்க்கு மேற்பட்ட தொகையை மாற்ற முயன்றால், 4,000 ரூபாய் ரொக்கமாகவும், மீதமுள்ளவை வங்கிக் கணக்கிலும் வரவு வைக்கப்படும்.
- நோட்டை மாற்றும்போது புதிய 500 மற்றும் 2000 நோட்டுக்களாகவும் பெறலாம். 500, 1000 ரூபாய் நோட்டுகளை தங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட்டும் செய்யலாம்.
- பணத்தை மாற்றும்போதோ, டெபாசிட் செய்யும்போதோ பான் கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஜெராக்ஸ் ஒன்று அவசியம். அடையாள அட்டை விவரங்களை வங்கி பதிவு செய்யவும். இதற்காக வங்கிகளில் கூடுதல் கவுன்ட்டர்கள் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- கணக்கு வைத்துள்ள வங்கியின் எந்தக் கிளையிலும் 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். வங்கிக்கு நேரடியாக செல்ல இயலாதவர்கள் பிரதிநிதியை அனுப்பி அத்தாட்சிக் கடிதம் தர வேண்டும். பணத்தை செலுத்துபவர் தனது அடையாள அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்.
- ஏடிஎம்களில் இன்று தொடங்கி 18ம் தேதி வரை நாளொன்றுக்கு அதிகபட்சம் 2,000 ரூபாயும், 19ம் தேதி முதல் 4000 ரூபாயும் எடுக்க அனுமதிக்கப்படும். அதன் பிறகு இந்த உச்ச வரம்பு 10,000 ஆக அதிகரிக்கப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- நவம்பர் 24ம் தேதி வரை வங்கிகளில் பணமெடுக்கும் விண்ணப்பத்தில் 10,000 ரூபாய் வரையும், காசோலையில் 20,000ரூபாய் வரையும் மட்டுமே பணம் பெற முடியும். அனுமதிக்கப்பட்ட உச்ச வரம்பு வரை வழக்கம்போல ஏடிஎம்களில் பணம் டெபாசிட் செய்யலாம்.
- ரொக்கம் தவிர்த்து, மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங், ஃபண்ட் டிரான்ஸ்ஃபர் ஆகிய மின்னணு பரிமாற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. டிசம்பர் 30ம் தேதி வரை 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- ரூ.500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ள போதிய பணம் வங்கி கிளைகளில் உள்ளது என்றும் பணத்தை மாற்றிக்கொள்ள அனைத்து வங்கிகளிலும் உரிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று சென்னையில் உள்ள தென்மண்டல ரிசர்வ் வங்கிக் கிளை அறிவித்துள்ளது.
- 500, 1000 ரூபாய் நோட்டுகளை இன்னும் 50 நாட்களுக்கு வங்கிகளில் கொடுத்து மாற்றலாம் என்றும் மார்ச் 31 வரை வங்கிகளில் பணத்தை மாற்றிக்கொள்ள வசதி உள்ளது என்றும் கைவசம் உள்ள பணத்தை மாற்ற அச்சப்பட வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
English summary
Big denomination notes banks and post only accepted offices from tomorrow. Prime Minister Narendra Modi on Tuesday evening announced that all Rs 500 and Rs 1,000 currency notes will become illegal tender from the intervening midnight of November 8. many organisations would not accept notes of Rs 500 and Rs 1,000 denomination from today night.