வரி கட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வரி செலுத்த பயன்படுத்தலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை ரூ.500, ரூ.1,000 நோட்டுகளாக செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்தவேண்டிய சொத்து வரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளை பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் பொது வசூல் மையங்கள், மாநகராட்சி வரி வசூலிப்பாளர்கள், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. மையத்தின் பொதுச்சேவை மையங்களில், காசோலை மற்றும் வரைவோலை மூலமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.
இதை தவிர்த்து, மாநகராட்சியால் அனுமதிக்கப்பட்ட 11 வங்கிகள் மற்றும் சென்னை மாநகரில் உள்ள அவற்றின் கிளைகள் மூலம் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைசியா வங்கி, எச்.டி.எப்.சி வங்கி, ஐ.டி.பி.ஐ. வங்கி, கனரா வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, கொடாக் மகேந்திரா வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி, எஸ் வங்கி, மற்றும் இன்டஸ் இன்ட் வங்கி) வாக்-இன்-பேமண்ட், காசோலை, வரைவோலை மற்றும் ரொக்கமாகவும், மாநகராட்சி இணையதளம் மூலமாகவும் மாநகராட்சி வரிகளை பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி பொதுமக்களிடம் வரிகளை நேரடியாக ரொக்கமாக வசூல் செய்யும் வழக்கத்தை, கடந்த 2002-ம் ஆண்டு ஜனவரி மாதமே நிறுத்திவிட்டது. இருப்பினும், மேற்கண்ட வங்கிக் கிளைகளில் நேரடியாக ரொக்கமாக செலுத்த இன்று வரை வழிவகை இருந்து வருகிறது.
தற்போது மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்த வேண்டிய வரி மற்றும் கட்டணங்களை செலுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட வரி, கட்டணங்களை 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி வருகிற 14-ந்தேதி வரை செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தநிலையில் பொதுமக்கள் நலன்கருதி, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி மற்றும் இதர வரிகளை ரொக்கமாக வசூல் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் தலைமையகம், அனைத்து மண்டல அலுவலகங்கள், வார்டு அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் சேவை மையங்களில் அமைக்கப்பட்டுள்ள முகப்புகளில் (கவுண்ட்டர்) 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளாக (ரொக்கமாக) பொதுமக்கள் செலுத்த வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சிறப்பு கவுண்ட்டர்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை செயல்படும்.
1. 200 வார்டு அலுவலகங்கள் (1 கவுண்ட்டர்கள் வீதம்) - 200 கவுண்ட்டர்கள்.
2. 15 மண்டல அலுவலகங்களில் 2 கவுண்ட்டர்கள் வீதம் - 30 கவுண்ட்டர்கள்.
3. தலைமையகம்(ரிப்பன் மாளிகை) - 3 கவுண்ட்டர்கள்.
4.தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவன சேவை மையங்கள்.
15 மண்டல அலுவலகங்களில் 2 கவுண்ட்டர்கள் வீதம் - 30 கவுண்ட்டர்கள்.
தலைமையகம் (ரிப்பன் மாளிகை) - 2 கவுண்ட்டர்கள்.
179 வார்டு அலுவலகங்களில் 1 கவுண்ட்டர்கள் வீதம் - 179 கவுண்ட்டர்கள்.
1 வார்டு அலுவலகத்தில் 2 கவுண்ட்டர்கள் (வார்டு44) - 2 கவுண்ட்டர்கள்.
மொத்தம் 446 கவுண்ட்டர்கள் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில் வரி, இதர வரிகள் அனைத்தையும் வருகிற 14-ந்தேதிக்குள் செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இது தொடர்பான புகார், சந்தேகங்களுக்கு '1913' என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.