மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக வந்த செய்தி வதந்தியே... காவல் துறை
சென்னை: சென்னை தனியார் பள்ளியில் வடமாநில மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக வெளியான தகவல் வெறும் வதந்தி என சென்னைப் போலீஸ் தெரிவித்துள்ளது.
சென்னை பல்லாவரத்தில் சுமார் நாலாயிரத்திற்கும் அதிகமான மாணவிகள் படித்து வரும் தனியார் பெண்கள் பள்ளியொன்று உள்ளது. கடந்தவாரம் அப்பள்ளியின் விடுதியில் தங்கிப் படித்த வடமாநில பள்ளி மாணவி ஒருவர் கட்டிட தொழிலாளர்களால் பள்ளி வளாகத்திலேயே பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
மூன்று தின விடுமுறைக்குப் பின்னர் நேற்று வழக்கம் போல் பள்ளி நடைபெற்ற போது, சம்பந்தப்பட்ட பள்ளியின் முன்பு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் திரண்டு இது தொடர்பாக போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவி கொலை...
பள்ளி வளாகத்தில் கட்டிட வேலை நடந்து வருவதால் தனியாக பாத்ரூம் சென்ற மாணவியை கட்டிட தொழிலாளர்கள் பலாத்காரம் செய்து கொலை செய்ததாகவும், விசயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் என பள்ளி நிர்வாகம் மாணவியின் சடலத்தை ரகசியமாக புதைத்து விட்டதாகவும் பெற்றோர்கள் குற்றம் சாட்டினர்.
சுவர்களில் ரத்தம்..
மேலும், பள்ளியின் பாத்ரூம் சுவர்களில் ரத்தத்தை சில மாணவிகள் பார்த்ததாகவும், மாணவிகளை காரணங்கள் கூறாமல் குறிப்பிட்ட பாத்ரூமிற்கு மட்டும் செல்ல வேண்டாம் என ஆசிரியர்கள் கூறுவதாகவும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
சிறைவைப்பு...
பெற்றோர்களின் முற்றுகையால் பள்ளியின் வெளிப்புற கதவுகள் அடைக்கப்பட்டன. இதனால், பெற்றோர்கள் போராட்டத்தில் குதித்தனர். பள்ளிக்குள் தங்கள் குழந்தைகள் சிறை வைக்கப் பட்டிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர்.
விளக்கம்...
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் உயரதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது பள்ளியில் எந்தவொரு மாணவியும் காணாமல் போகவில்லை, அசம்பாவிதம் ஏதும் நடைபெற வில்லை என பள்ளி நிர்வாகம் விளக்கமளித்தது.
வதந்தி...
போலீசாரின் விசாரணையில் மாணவி கொல்லப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என தெரிய வந்தது. அதற்குள்ளாக பள்ளியின் வெளிப்புறக் கதவுகளை உடைத்துக் கொண்டு பெற்றோர்கள் உள்ளே நுழைந்ததால், அசம்பாவிதங்களைத் தடுக்கும் விதமாக பெற்றோர்கள் மீது போலீசார் லேசான தடியடி நடத்தினர்.
கலைந்து சென்றனர்...
பின்னர், பள்ளிக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்பட்டது. தங்களது பெண் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர் கலைந்து சென்றனர்.
பரபரப்பு...
சுமார் 5 மணி நேரங்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான பெற்றோர் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எச்சரிக்கை...
இது போன்ற தேவையற்ற பிரச்சினைக்குரிய வதந்திகளைப் பரப்புவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னைப் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் எச்சரித்துள்ளார்.