வழி நெடுக ‘பாட்டுப் பாடி’... மெல்லிசை மன்னருக்கு ‘இசை ’அஞ்சலி செலுத்திய தமிழ் சினிமா!
சென்னை: மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இறுதி ஊர்வலத்தில் இன்னிசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.
பழம் பெரும் இசையமைப்பாளர் எம்.எச்.விஸ்வநாதன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவரது உடல் அஞ்சலிக்காக சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.
87 வயதான எம்.எஸ்.வி., சுமார் 1200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எம்.எஸ்.வி.யின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இன்று காலை அவரது உடல் பெசண்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது. அவரது இறுதிச் சடங்கில் திரையுலகப் பிரபலங்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். எம்.எஸ்.வி.யின் வீட்டிற்கு வெளியே பொதுமக்கள் கூட்டமும் காணப்படுகிறது.
இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாரின் இரங்கல் இசைக்கச்சேரிக்குப் பின்னர் எம்.எஸ்.வி.யின் உடல் பெசண்ட் நகர் மின்மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
இந்த இறுதி ஊர்வலத்தின் போது, எம்.எஸ்.வி.யின் உடல் வைக்கப் பட்டிருக்கும் வாகனத்தின் அருகில், மற்றொரு வாகனத்தில் பாடகர்கள் பாடிய படியே அவருக்கு இசை அஞ்சலி செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.