கிரானைட் முறைகேடு: 5 ஆம் கட்ட ஆய்வில் கலக்கப் போகும் சகாயம் - கதிகலங்கும் அதிகாரிகள்
மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவினர் 5 ஆம் கட்ட ஆய்வினை மதுரையில் இன்று தொடங்கியுள்ளனர். முறைகேடு நடந்தபோது கண்டும் காணமல் இருந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி சகாயம் விசாரிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கிரானைட் குவாரிகளில் நடைபெற்றுள்ள முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி முதல் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழவளவு, கீழையூர், திருமோகூர், திருவாதவூர், இ.மலம்பட்டி, இடையபட்டி, உள்ளிட்ட பகுதிகளில் கிரானைட் குவாரிகளை ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ஆய்வு செய்து வருகிறார்.
ஏற்கனவே 4 கட்ட ஆய்வினை முடித்த சகாயம், தனது கள ஆய்வில் இப்பகுதிகளில் உள்ள புறம்போக்கு, கண்மாய், மலைப்பகுதிகள், ஆக்கிரமிப்புகள், பாதிப்புகளை பார்வையிட்டார்.
தமிழ் மொழியின் தொன்மையான பழைய எழுத்துக்கள் மற்றும் நீர் நிலைகள் சிதைக்கப்பட்டது சகாயம் குழுவின் ஆய்வில் தெரியவந்தது. இது தொடர்பாக, கனிமவளத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண்மை துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
குவாரிகளில் கிரானைட் கற்கள் வெட்ட அனுமதிக்கப்பட்ட அளவு, முறைகேடாக வெட்டப்பட்டுள்ள அளவு குறித்து ஆளில்லா விமானம் மூலம் அளவீடும் பணியை கடந்த 12ஆம் தேதி மேற்கொண்டார். அப்போது ஆளில்லா விமானம் குவாரி குட்டையில் விழுந்து மூழ்கியது. அன்றைய தினம் தனது 4ஆம் கட்ட விசாரணையை முடித்துக் கொண்ட சகாயம் சென்னை சென்றார். மூன்று நாட்களுக்குப் பின்னர் குவாரி குட்டையில் இருந்த ஆளில்லா விமானம் மீட்கப்பட்டது.
இந்நிலையில் சகாயம் ஞாயிறன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், 5ஆம் கட்ட விசாரணைக்காக காரில் மதுரை வந்தார்.
இன்று அலுவலக ஆய்வு பணிக்கு பின் மீண்டும் நேரில் சென்று கள ஆய்வை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆய்வில் கிரானைட் கற்கள் வெட்டியது தொடர்பாக அளவிடும் பணியை மேற்கொள்வார் என கூறப்படுகிறது.
மேலும் இதுவரை கிரானைட் முறைகேடு தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய புகார் மீதும், நரபலி தொடர்பாக வந்த புகார் மீதும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து போலீசாரிடமும் விசாரணை நடத்த உள்ளார்.
இதுவரை வழக்குகளில் தொடர்பில்லாத, ஆனால் முறைகேடாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்ட மேலும் பல பகுதிகளில் ஆய்வு செய்ய உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்த ஆய்வில், கிரானைட் முறைகேடு நடைபெற்ற காலத்தில் பணியில் இருந்த அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.