சென்னை: சாய்ராம் பொறியியல் கல்லூரி மாணவர் மர்ம மரணம்- கிணற்றிலிருந்து சடலம் மீட்பு
சென்னை: தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி வளாக கிணற்றில் இருந்து முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்த மாணவரின்பெயர் அபிநாத் என்பதாகும். இவர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தராவார். மாணவரின் உடல் கிணற்றில் மிதப்பதாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார், 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு மாணவரின் சடலத்தை மீட்டனர்.
சாய்ராம் பொறியியல் கல்லூரியில் மாணவர்கள் கடுமையான விதிமுறைகள், கெடுபிடிகளுக்கு உட்படுத்தப்படுவதாக அண்மையில் அக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டம் நடந்து ஒரு சில மாதங்களே ஆன நிலையில் கல்லூரி வளாகத்தில் மாணவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்த சாய்ராம் கல்லூரி நிர்வாகி சாய்பிரகாஷ் லியோ முத்து, "மாணவர் அபிநாத் எங்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மருத்துவராவதே அவரது லட்சியமாக இருந்துள்ளது. ஆனால், பெற்றோர் வற்புறுத்தலின் பேரில் அவர் பொறியியல் படிப்பில் சேர்ந்திருக்கிறார்.
இதனால் மிகுந்த ஏமாற்றத்திலிருந்த அபிநாத் பொறியியல் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் பெற முடியாமல் தவித்து வந்தார். நடந்த முடிந்த செமஸ்டரில் அவர் 4 பாடங்களில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர் இந்த துரதிர்ஷ்ட முடிவை எடுத்துள்ளார்.
நாங்கள் இச்சம்பவத்துக்காக வருந்துகிறோம். இச்சம்பவத்துக்கு கல்லூரி நிர்வாகம் எவ்வகையிலும் பொறுப்பில்லை" என்றார். சமூக வலைதளங்களில் மாணவர் மரணம் தொடர்பாக பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கல்லூரி மாணவர்கள் சிலர் அபிநாத் மரணம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் அளித்துள்ள விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்று கூறியுள்ளனர். கல்லூரி விடுதியை வளாக நிர்வாக இயக்குநர் பாலு ஏற்று நடத்தி வருகிறார். அவர் மாணவர்களை எப்போதுமே தரக்குறைவாக நடத்துவார் என்றும் குற்றம் சாட்டியுள்ளனர்.
அபிநாத்தின் உடல் மீட்கப்பட்ட தினத்தன்று திடீரென்று அனைவரையும் விடுதி அறையிலிருந்து வெளியேறும் கூறினர். ஆனால் அதற்கான காரணத்தை முதலில் சொல்லவில்லை. பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வு என்றும், வெடிகுண்டு மிரட்டல் என்றும் மாறி மாறி காரணம் கூறினர். கல்லூரி நிர்வாகம் மீது எங்களுக்கு துளிகூட நம்பிக்கை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.
அபிநாத்துடன் அறையில் தங்கியிருந்த பி.கவுதம் என்ற மாணவர், இரண்டு நாட்களுக்கு முன்னர் வார்டன் அனுமதியில்லாமல் வெளியில் சென்றதற்காக அபிநாத்திடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அபிநாத் சோர்வாக இருந்தார் என்று தெரிவித்துள்ளார்.
அபிநாத்தின் மரணம் தொடர்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் புதன்கிழமைவரை கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி அருகே இயற்கை யோகா சித்த மருத்துவ கல்லூரியில் பயின்ற 3 மாணவிகள் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் பொறியியல் கல்லுரி மாணவர் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.