அதாவது, கூவத்தூரில் தங்கி மக்களுக்காக "மூளையைக் கசக்கிய" எம்எல்ஏ-க்களுக்கும் ஊதிய உயர்வு!
கூவத்தூரில் டேரா போட்டு கூத்தடித்த அதிமுக எம்எல்ஏ-க்களும் ஊதிய உயர்வு பெறப் போகிறார்கள் என்பது மக்களிடையே அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: ஊதியம் உயர்த்தி வழங்கும் அளவுக்கு தற்போது தமிழக எம்.எல்.ஏக்கள் எங்களுக்கு என்ன செய்து விட்டனர் என்று மக்கள் வெதும்பிக் கொண்டுள்ளனர். அதை விட கூவத்தூரில் டேரா போட்டவர்களுக்கும் கூட ஊதிய உயர்வு என்பதுதான் அவர்களை அதிர வைத்துள்ளது.
ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுக இரண்டாக பிளந்தது. இதனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை தன்னிடம் உள்ள 122 எம்எல்ஏ-க்களை தக்க வைத்துக் கொள்ள சசிகலா, கூவத்தூரில் தங்க வைத்தார்.
எம்எல்ஏ-க்கள் தங்கியிருந்த 8 நாள்களும் கூவத்தூர் ரிசார்டையே நாறடித்த கதைகள் உலகம் முழுவதும் தெரியும். மேலும் எம்எல்ஏ-க்களும், கூட்டணிக் கட்சி எம்எல்ஏ-க்களும் கோடிக்கணக்கில் விலை பேசப்பட்டதாக தனியார் ஆங்கில செய்தி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில் தெரியவந்தது.
தமிழர்களுக்கு துரோகம்
தமிழகத்தில் மேலும் உள்ள 4 ஆண்டுகளை தொடரவும், அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெறாமல் இருக்கவும், வாக்களித்த தமிழக மக்களுக்கே துரோகம் செய்யும் வகையில் பாஜகவின் காலில் ஷாஷ்டாங்கமாக விழுந்தனர். விவசாயிகள் பிரச்சினை, ஹைட்ரோ கார்பன் திட்டம், கதிராமங்கலம், நீட் தேர்வு, மதுவிலக்கு, தண்ணீர் பிரச்சினை உள்ளிட்ட எந்த பிரச்சினைகளிலும் தலையிடாமல் மேம்போக்கு காட்டி வந்தனர்.
செயலற்ற அரசு
பொறுபேற்ற 2 மாதங்களில் 11,70 கோப்புகளில் கையெழுத்திட்டதாக மார்த்தட்டி கொள்ளும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை உருப்படியாக மக்கள் நலனில் அக்கறை செலுத்தவே இல்லை. இதனால் செயலற்ற அரசாகவே இருந்து வருகிறது இந்த அரசு. நீட் துரோகம் ஒன்றே இந்த அரசின் செயல்பாட்டுக்கு நல்ல சான்று.
எம்எல்ஏ-க்களின் சம்பளம் அதிகரிப்பு
இந்த நிலையில் எம்எல்ஏ-க்களின் சம்பளத்தை இரு மடங்காக உயர்த்தி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதாவது ரூ.55 ஆயிரம் ஊதியமாக பெற்று வந்த எம்எல்ஏ-க்களுக்கு இனி ரூ.1.05 லட்சமாக வழங்கப்படும். இதை தமிழக மக்கள் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர்.
கூவத்தூரில் உழைப்பு
கூவத்தூரில் தங்கி நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி, கடுமையாக உழைத்து மக்கள் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை மேற்கொண்டு எதிர்காலத்தில் தமிழகத்தை மிகப் பெரிய வளமை மிக்க மாநிலமாக மாற்றத் தேவையான அனைத்து தொலைநோக்கு திட்டங்களையும் வகுத்த அந்த அதிமுக எம்.எல்.ஏக்களும் இந்த ஊதிய உயர்வைப் பெறப் போகிறார்கள்!
அடுத்த சான்ஸில்...
அடுத்த முறை சட்டசபை கூடும்போது இன்னும் சம்பளத்தை உயர்த்தி வழங்கினால் மட்டுமே தியாக செம்மல்களும், கறைபடியாத கைக்கு சொந்தகாரர்களான எம்எல்ஏ-க்களின் உழைப்புக்கு மேலும் பலன் இருக்கும். நீண்ட காலமாக ஊதிய உயர்வு கேட்டு வரும் போலீஸ்காரர்கள், பயிர்க் கடன் தள்ளுபடி கோரும் விவசாயிகள் எல்லாம் வேஸ்ட். கூவத்தூரில் டேரா போட்டவர்கள்தான் நாட்டிலேயே ஒஸ்தியானவர்கள் என்று மக்கள் வெதும்பிக் கொண்டுள்ளனர்.
நீங்க நடத்துங்க சார்.. நல்லா நடத்துங்க!