சேலம் சாலைக்கு உங்கள் சொந்த நிலத்தை கொடுப்பீர்களா? முதல்வருக்கு அன்புமணி கேள்வி
சேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் முதல்வர் அவருடைய நிலத்தை தர முன்வருவரா என்று நாடாளுமன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சேலம் 8 வழிச்சாலைக்கு விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தும் முதல்வர் அவருடைய சொந்த நிலத்தை தர முன்வருவரா என்று நாடாளுமன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் - சென்னை இடையே புதிதாக போடப்பட உள்ள 8 வழி சாலைக்கு எதிராக மக்கள் போராடி வருகிறார்கள். ஆளும்கட்சி, பாஜகவை தவிர மற்ற கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதுகுறித்து தற்போது நாடாளுமன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த அன்புமணி பேட்டியளித்துள்ளார்.
சேலம், தருமபுரி தொடங்கி திருவண்ணமாலை வரை எல்லா தொகுதி மக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து பேசினேன். ஒருவர் கூட நிலம் தருவதற்கு முன்வரவில்லை. இன்னும் சிலர் நிலம் கொடுத்தால் அதற்கு ஈடாக வேறு இடத்தில் எங்களுக்கு நிலம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்கள்.
தமிழக முதல்வர் சட்டசபையில் பெரிய பொய் சொல்லியுள்ளார். விவசாயிகள் யாரும் தாமாக முன்வந்து நிலம் கொடுக்கவில்லை. எந்த விவசாயியும் நிலம் கொடுக்க ஆசைப்படவில்லை. ஆனால் விவசாயிகள் நிலம் கொடுக்க ஆசைப்படுவதாக முதல்வர் பொய் சொல்லியுள்ளார்.
நான் எப்போதும் வளர்ச்சிக்கு எதிராக இருந்ததில்லை. ஆனால் இந்த சாலை திட்டம் விவசாயத்திற்கு எதிரானது. இந்த சாலை தேவையில்லாதது. இந்த சாலையில் இரண்டு மணி நேரத்தில் எல்லாம் எங்கும் செல்ல முடியாது. இந்தியாவிலேயே அப்படிப்பட்ட சாலைகள் கிடையாது.
ஏற்கனவே சென்னை சேலம் சாலையில் மிகவும் குறைந்த வாகனம்தான் செல்கிறது. அப்படி இருக்கும் போது இந்த சாலையின் அவசியம் என்ன என்று தெரியவில்லை. அதற்கு முதல்வர்தான் பதிலளிக்க வேண்டும்,
விவசாயிகளிடம் அனுமதி இல்லாமல் நிலத்தை கைப்பற்றுகிறார்கள். விவசாய நிலங்களை கையகப்படுத்தும் முதல்வர் அவருடைய நிலத்தை தர முன்வருவரா என்று தெரியவில்லை. 5 லட்சம் மரங்களை வெட்டிய பின் சாலை அமைக்கப்பட உள்ளது. மரங்களை வெட்டியா பிறகு பசுமை வழி சாலை தேவையா என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.