சேலம் ரயில் கொள்ளை... துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம்... சிபிசிஐடி அறிவிப்பு
சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் நடந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் கொள்ளையர்கள் குறித்து துப்புக் கொடுத்தால் அவர்களுக்கு ரூ.2 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல் துறையும். சிபிசிஐடி இணைந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி சேலத்திலிருந்து சென்னைக்கு ரூ.332 கோடி பணம் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. அப்போது நடுவழியில் ரயிலின் மேற்கூரையை பிரித்த மர்மநபர்கள் அதில் இறங்கி ரூ.5.78 கோடியை கொள்ளையடித்து சென்றனர்.
நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கு சிபிசிஐடி போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் துப்பு ஏதும் கிடைக்காததால் போலீஸார் திணறி வருகின்றனர். மேலும் சிபிசிஐடியில் உள்ள அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றம் செய்யப்படுவதால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியவில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரயிலில் கொள்ளையடித்தவர்கள் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ. 2லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று சென்னை ரயில் நிலையங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. கொள்ளையர்கள் குறித்து தகவலறிந்தால் 044-28511600 என்ற தொலைப்பேசி எண்ணுக்கோ அல்லது 9940022422 அல்லது 9940033233 என்ற எண்களுக்கோ தகவல் தெரிவிக்கலாம் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.