மகள் திருமணம்: ஜெ.,வை நேரில் சந்தித்து அழைத்த சரத்குமார், ராதிகா
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார், தனது மனைவியும், நடிகையுமான ராதிகாவுடன் சென்று மகள் ரேயான் திருமண விழா அழைப்பிதழ் வழங்கினார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் சரத்குமார்-ராதிகா சரத்குமாரின் மகள் ரேயான். இங்கிலாந்தில் உள்ள லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், சென்னையில் உள்ள ராடான் டிவியின் துணைத்தலைவராக பதவி வகித்து வருகிறார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த அபிமன்யூ மிதுனை ரேயான் திருமணம் செய்ய உள்ளார். அபிமன்யூ இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அபிமன்யூ விளையாடி வருகிறார்.
இவர்களது திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி கடந்த ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவை குடும்பத்துடன் நேரில் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார் சரத்குமார்.
இதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.வி.எம். முத்துக்குமார் குடும்பத்துடன் சென்று தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர் செல்வம் தனது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழ் வழங்கினார். இதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் திருத்தணி ஜி.ஹரியும் முதல்வர் ஜெயலலிதாவை குடும்பத்துடன் நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார்.