ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்.. சென்னை சென்ட்ரலில் ரயிலை மறிக்க முயன்ற ச.ம.க தொண்டர்கள் கைது
சென்னை: ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் போலீசார் முன்கூட்டியே அக்கட்சியினரை கைது செய்தனர்.
ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு மத்திய அரசு வழங்கிய அனுமதிக்கு, சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தவிருந்த தமிழக மக்கள் அதிர்ச்சியிலுள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்க கோரிக்கைவிடுத்து, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்துவதாக சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சி நேற்றே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
அறிவித்தபடி இன்று அக்கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தனர். ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும்படி அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். ரயில் நிலையத்திற்குள் நுழைய சென்ற அவர்களை ரயில்வே பாதுகாப்பு போலீசாரும், உள்ளூர் போலீசாரும், இணைந்து தடுத்தனர்.
பின்னர் சமத்துவ மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டு, அருகிலுள்ள காவலர் சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது. இந்த போராட்டத்தில் எம்.எல்.ஏ எர்ணாவூர் நாராயணன், கட்சி பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications