இதுதாண்டா அரசியல்.... இரண்டாக உடைந்த சமத்துவ மக்கள் கட்சி... மீண்டும் அதிமுகவில்.. இரு கட்சிகளாக!
சென்னை: கடந்த ஐந்து வருடங்களாக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று, சமீபத்தில் உடைந்து இரண்டாக மாறிய சமத்துவ மக்கள் கட்சியின் இரு பிரிவுகளும் மீண்டும் அதிமுக கூட்டணியில் இடம் பெறும் வினோதம் நடந்துள்ளது.
சரத்குமாரின் கட்சி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி. அக்கட்சி கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இருதொகுதிகளில் போட்டியிட்டது. அதில் சரத்குமாரும், எர்ணாவூர் நாராயணனும் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் ஜெயலலிதாவின் அன்பு வளையத்திலிருந்து நீக்கப்பட்டார் சரத்குமார். அவரை ஜெயலலிதா ஓரம் கட்டினார். நடிகர் சங்கத் தேர்தலிலும் கூட சரத்குமாரை அவர் ஆதரிக்கவில்லை. இதனால் விஷால் தரப்பு ஜெயிக்கும் நிலை ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து சமீபத்தில் சரத்குமாரின் கட்சி இரண்டாக உடைந்தது. எர்ணாவூர் நாராணன் சமத்துவ மக்கள் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். மேலும் பலர் விலகி பாஜகவில் போய்ச் சேர்ந்தனர்
இந்த நிலையில் சரத்குமாரும், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து அவர் பாஜக முகாமுக்கு திடீரென தாவினார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்துப் பேசினார். விஜயகாந்த்தும் தன்னைப் போல பாஜக கூட்டணிக்கு வர வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்தப் பின்னணியில் எர்ணாவூர் நாராயணை அதிமுக தலைமை சமீபத்தில் அழைத்துப் பேசியது. இதையடுத்து அக்கட்சி, அதிமுக கூட்டணியில் இணைந்தது. இந்தச் சூழலில் தற்போது சரத்குமாரையும் ஜெயலலிதா அழைத்து பேசி மீண்டும் கூட்டணியில் சேர்த்துள்ளார். இதன் மூலம் இரு சமத்துவ மக்கள் கட்சிப் பிரிவுகளும் ஒரே கூட்டணியில் மீண்டும் இடம் பெறுகின்றன.
இருவரும் தனித் தனிக் கட்சிகளாக தொடர்வார்களா அல்லது (ஜெயலலிதா அறிவுறுத்தலின் பேரில்) மீண்டும் ஒரே கட்சியாக இணைந்து செயல்படுவார்களா என்பது தெரியவில்லை.