சசிபெருமாள் கழுத்திலும், இடுப்பிலும் கயிறு கட்டியிருந்தார்... தீயணைப்பு அதிகாரி தகவல்
நாகர்கோவில்: மறைந்த காந்தியவாதி சசிபெருமாளை செல்போன் டவரில் இருந்து மீட்டபோது அவர் கழுத்திலும், இடுப்பிலும் கயிறு கட்டியிருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே டாஸ்மாக் கடை ஒன்றை அகற்றக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி போராடியபோது, பரிதாபமாக உயிரிழந்தார் காந்தியவாதி சசிபெருமாள்.
அவரது சட்டையில் ரத்தக் கறைகள் இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சசிபெருமாளின் மரணத்திற்காக தெளிவான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை. ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், சசிபெருமாளை செல்போன் டவரில் இருந்து கீழே இறக்கிய குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி துரை இது தொடர்பாக கூறுயிருப்பதாவது:-

மீட்கும் நோக்கில்...
சசிபெருமாளும், பேரூராட்சி தலைவர் ஜெயசீலனும் செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்துவது பற்றி எங்களுக்கு தகவல் வந்ததும், அவர்களை மீட்கும் நோக்கில் உரிய உபகரணங்களுடன் எங்கள் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றோம்.

தற்கொலை மிரட்டல்...
நாங்கள் உடனடியாக டவரில் ஏற தயாரானோம். அப்போது சசிபெருமாளும், பேரூராட்சி தலைவரும் டவரில் ஏறி எங்களை காப்பாற்ற முயன்றால் நாங்கள் இங்கேயே தீக்குளிப்போம் என மிரட்டினர். அவர்கள் கையில் மண்எண்ணெய் கேனும், கயிறும் வைத்திருந்தனர்.

பேச்சுவார்த்தை...
இதையடுத்து போராட்டக்காரர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையை தொடங்கினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்களை இறங்க கூறினோம். அவர்கள் இறங்காததால் உடனடியாக எங்கள் வீரர்கள் டவரில் ஏறினார்கள். முதலில் நின்ற பேரூராட்சி தலைவர் ஜெயசீலனை பத்திரமாக கீழே இறக்கிக்கொண்டு வந்தோம்.

மயங்கிய நிலையில் சசிபெருமாள்...
பின்னர் டவரின் உச்சியில் இருந்த சசிபெருமாளை மீட்கச் சென்றோம். வீரர்கள் டவரின் உச்சிக்கு சென்றபோது சசிபெருமாள் மயங்கிய நிலையில் இருந்தார். மூக்கில் இருந்து ரத்தம் வடிந்தபடி இருந்தது.

கழுத்தில் கயிறு...
டவரில் இருந்து கீழே விழாமல் இருக்க இடுப்பில் ஒரு கயிறை கட்டி டவருடன் இணைத்து இருந்தார். மேலும் கழுத்திலும் அவர் ஒரு கயிறை தொங்கவிட்டு இருந்தார். அந்த கயிறு கழுத்தை இறுக்கியபடி காணப்பட்டது.

உயிரிழந்தார்...
அவர் கட்டியிருந்த கயிறை அவிழ்க்க முடியாததால் வெட்டி எடுத்து பத்திரமாக கீழே கொண்டு வந்தோம். அதன்பின் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications