ஜனாதிபதி தேர்தல்: பாஜக வேட்பாளரை எதிர்க்க 'தில்' இல்லாத சசிகலா!
நெருக்கடிகளால் கதிகலங்கிப் போயுள்ள சசிகலா வேறுவழியில்லாமல் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக அறிவித்துள்ளார்.
சென்னை: டெல்லியின் நெருக்கடியில் சிக்கியுள்ள சசிகலா ஜனாதிபதி தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு என ஒரு வெள்ளைக் கொடியை பறக்கவிட்டிருக்கிறார்.
ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுகவின் இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகள் விழுந்தடித்து ஆதரவு தெரிவித்துள்ளன. அத்துடன் ராம்நாத் கோவிந்தின் வேட்புமனுத் தாக்கலுக்காக இபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.
அதேபோல் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையும், அனைவரும் கலந்து பேசித்தான் பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். ஆனால் இன்று டிடிவி தினகரனை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக எம்.எல்.ஏ. வெற்றிவேல், பாஜகவை ஆதரிக்கும் எடப்பாடியின் முடிவை ஏற்க முடியாது என கூறியுள்ளார்.

ஏற்க மறுப்பு
அத்துடன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக சசிகலாவே விரைவில் முடிவை அறிவிப்பார்; அதிமுகவில் சசிகலா, தினகரனுக்கு அடுத்ததுதான் எடப்பாடி. அதிமுகவில் 3-வது இடத்தில் உள்ள எடப்பாடி பழனிச்சாமியின் முடிவை ஏற்க முடியாது என அறிவித்துள்ளார்.

செல்லப்பிள்ளைகள்
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுகவையும் கட்சியையும் சசிகலா குடும்பம் கைப்பற்றக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பாஜக. ஜனாதிபதி தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் தேவை என்பதற்காகவே அந்த கட்சியின் இரண்டு கோஷ்டிகளையும் செல்லப்பிள்ளைகளாக வளர்த்து வருகிறது பாஜக.

தினகரனுக்கும் செக்
சசிகலா சிறைக்குப் போன நிலையில் அதிமுகவில் தலையெடுக்க முயற்சித்தார் தினகரன். அவருக்கும் செக் வைத்துக் கொண்டே இருக்கிறது பாஜக. இதன்விளைவாகத்தான் திஹார் சிறைவாசத்தையும் தினகரன் அனுபவிக்க நேரிட்டது.

பாஜகவுக்கு ஆதரவு
இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் பாஜக வேட்பாளரை ஆதரிப்பதாக இபிஎஸ், ஓபிஎஸ் கோஷ்டிகள் அறிவித்துவிட்டன. சசிகலாவை சிறையில் சந்தித்துவிட்டு போன தம்பிதுரையும் பாஜகவுக்கு ஆதரவு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

வெற்றிவேல் எதிர்ப்பு
ஆனால் திடீரென தினகரன் கோஷ்டி எம்.எல்.ஏ. வெற்றிவேல், சசிகலா சொல்வதுதான் இறுதியான முடிவு என அடம்பிடித்தார். அப்படியானால் பாஜக வேட்பாளரை எதிர்த்து அதிமுக வாக்களிக்கும் என அறிவிக்கும் தைரியம் சசிகலாவுக்கு இருக்குமா? என்ற கேள்வி எழுந்தது.

முற்றுப்புள்ளி வைத்த தினகரன்
அப்படியெல்லாம் சசிகலாவுக்கு தைரியம் இல்லை என்பதை டிடிவி தினகரன் 'பாஜகவுக்கு ஆதரவு' என்ற அறிக்கை மூலம் சொல்லிவிட்டார். சசிகலாவைப் பொறுத்தவரையில் எப்படியாவது அதிகாரத்தை ருசி பார்க்க வேண்டும்; இருக்கின்ற சொத்துகளை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அதற்காகவே இப்போது பாஜகவை ஆதரிப்பதாக ஒரு வெள்ளைக் கொடியை பறக்கவிட்டிருக்கிறார் என்பதுதான் யதார்த்தம்.












Click it and Unblock the Notifications