இருக்கு உங்களுக்கு கச்சேரி இருக்கு.. கூவத்தூரைக் கையில் எடுக்கும் சசிகலா புஷ்பா
சென்னை: சசிகலா புஷ்பா, அதிமுக அரசுக்கு எதிராக புதிய ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். அதாவது கூவத்தூர் அட்டகாசம் குறித்து விசாரணை நடத்துமாறு உள்துறை அமைச்சகத்திடம் புகார் கொடுக்கப் போகிறாராம். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து இதுகுறித்துப் பேசவுள்ளாராம்.
அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மீது பண பேர புகார் எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என உள்துறை அமைச்சகத்திடம் மனு கொடுக்க இருக்கிறார் சசிகலா புஷ்பா எம்.பி. தங்கமாகவும் பணமாகவும் பல நூறு கோடி ரூபாய்கள் விரயமாக்கப்பட்டுள்ளன. சி.பி.ஐ விசாரித்தால்தான் உண்மை வெளியில் வரும் எனக் கோரிக்கை வைக்க இருக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காலத்திலேயே, முதல்வரைச் சுற்றியுள்ளவர்கள், அவரை வைத்து மோசடி செய்கிறார்கள். அவருடைய கையெழுத்தைப் போலியாகப் போடவும் திட்டமிட்டுள்ளனர் என அதிர வைத்தார் அ.தி.மு.க எம்.பி சசிகலா புஷ்பா. தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் குறித்தும் சர்ச்சையை எழுப்பினார்.
அதிமுகவினரால் தாக்கப்பட்ட கணவர்
ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட விண்ணப்பம் கேட்டுச் சென்றார் புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வர திலகன். அவரை அ.தி.மு.க தொண்டர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனை எதிர்பார்க்காத சசிகலா புஷ்பா, நான் யார் என்பதை இவர்களுக்குக் காட்டுவேன்' எனக் கொதித்தார். இந்நிலையில், கூவத்தூர் பண விவகாரம் தொடர்பாக, அடுத்தகட்ட ஆட்டத்தைத் தொடங்க இருக்கிறார் புஷ்பா.
கட்சிப் பதவிக்குக் குறி
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவருடைய ஆதரவாளர் ஒருவர், கட்சிப் பதவிக்கு வர வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வமாக இருக்கிறார் சசிகலா புஷ்பா. அதற்காகத்தான் விண்ணப்பம் கேட்டு தலைமைக் கழகத்துக்கு சென்றார். தற்போது வரையில் அ.தி.மு.க உறுப்பினராக அவர் நீடிக்கிறார். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என தொலைக்காட்சிகளின்தான் செய்தி ஓடியது. அதுகுறித்த அறிக்கையை மாநிலங்களவையில் அ.தி..மு.க நிர்வாகிகள் சமர்ப்பிக்கவில்லை. எனவே, கட்சி விதிகளின்படி அவரும் போட்டியிடத் தகுதியுடையவர்தான்.
தேர்தல் ஆணைய முடிவுக்காக வெயிட்டிங்
தேர்தல் ஆணையத்தின் முடிவை அவர் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். கடந்த சில நாட்களாக, சசிகலா குடும்பத்தின் செயல்பாடுகளை கவனித்து வருகிறார். கூவத்தூரில் எம்.எல்.ஏக்களுக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட விவகாரத்தை, முக்கிய ஆதாரமாகப் பார்க்கிறார்.
இது ஒன்று போதும்
இந்த ஆட்சியைக் கலைக்க இது ஒன்றே போதும். இதன்பேரில் சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும். எம்.எல்.ஏக்களுக்குக் கொடுக்கப்பட்ட பணம் எந்த வகையில் வந்தது? இவ்வளவு பெரிய தொகையை எந்த வாகனத்தில் கொண்டு வந்தார்கள்? யார் யார் விநியோகத்தில் ஈடுபட்டது? எந்த வழிகளில் பணத்தைக் கொடுத்தார்கள்? தங்கமாக எப்படிக் கொடுத்தார்கள்? இதன் பின்னணியில் இருந்தவர்கள் யார்?' என்பது குறித்த சந்தேகங்களைப் பட்டியலிட்டு மத்திய அரசிடம் மனு கொடுக்க இருக்கிறார்.
சசிகலா, தினகரனை விசாரிக்க கோரிக்கை
எம்.எல்.ஏக்கள் சரவணன், கனகராஜ் ஆகியோருடன் சசிகலாவும் தினகரனும் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை, உள்துறை அமைச்சகத்திடம் மனுவாக அளிக்க இருக்கிறார். இந்த மனுவை மத்திய அரசு பரிசீலிக்கும் எனவும் உறுதியாக நம்புகிறார் என்றார் விரிவாக.