சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுபட கோவில் கோவிலாக வழிபாடு நடத்தும் சசிகலா
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. செப்டம்பர் 27ல் தீர்ப்பு என்று உறுதி செய்யப்பட்டு விட்டது. தீர்ப்பு தேதி நெருங்க நெருங்க ஒருவித கிலியில் உள்ளனர் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள்.
வழக்கறிஞர்களின் வாதங்களை ஒருபுறம் நம்பினாலும், வழக்கில் வெற்றி பெற கடந்த இரண்டு வாரங்களாக கோயில் கோயிலாக வலம் வந்து கொண்டு இருக்கிறார் சசிகலா.
சசிகலா உறவினர்கள் அனைவரையும் அழைத்து, 'அடக்கமாக இருக்க' வலியுறுத்தப்பட்டுள்ளதாம். அமைச்சர்கள், அவர்களது உறவினர்கள், எம்.எல்.ஏ-க்கள் அனைவரது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுகின்றனவாம்!''

பாம்பன் சுவாமிகள் கோவில்
திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் சமாதிக்குச் சென்று ஒரு மணி நேரத்துக்கு மேல் அங்கு அமர்ந்து வழிபாடு நடத்தியுள்ளார். ஜெயலலிதாவுக்கும் தனக்கும் மோதல் ஏற்பட்டபோது சசிகலா அடிக்கடி பாம்பன் சுவாமிகள் கோவிலுக்கு சென்றுதான் வழிபாடு நடத்தினார். தற்போது சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு சுபமாக இருக்கவேண்டும் என்று இப்போதும் அங்கு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

மங்களூர் மஞ்சுநாதா கோவில்
மங்களூர் மஞ்சுநாத சுவாமி கோயிலிலும் சசிகலாவுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. திருப்போரூர் முருகன் கோயிலில் வழிபாடு செய்யப்பட்டுள்ளது. சசிகலாவின் உறவினரான மகாதேவனும் பூஜைகள் நடத்தி உள்ளார்.

வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் வழிபாடு
காஞ்சிபுரம் காந்திரோட்டில் உள்ள வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் 16 திங்கட்கிழமை, 16 விளக்கேற்றி, சுவாமியை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும், என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

அமைச்சர்கள் வழிபாடு
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காக, அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன் ஆகியோர், கடந்த 2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி, சிறப்பு வழிபாடு நடத்தினர்.

வேண்டிக்கொண்ட சசிகலா
சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தானும், முதல்வரும் விடுபட வேண்டும் என்பதற்காக வழக்கறுத்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வழிபட்டுள்ள சசிகலா சமீபத்திலும் அந்த கோவிலுக்கு சென்று வழிபட்டுள்ளார். அதன்பின் காஞ்சிபுரம் காளிகாம்பாள் கோவில், சித்ரகுப்த சுவாமி கோவில் ஆகியவற்றிற்கும் சென்று வழிபாடு நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடவுள்கள் கைகொடுப்பார்களா
தன் தரப்பு நியாயங்களை நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ள சசிகலா, வழக்கில் இருந்து விடுதலை பெற வேண்டி கோவில் கோவிலாக சென்று கொண்டிருக்கின்றனர். கடவுள்கள் கை கொடுப்பார்களா? இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும் காத்திருப்போம்.












Click it and Unblock the Notifications