3 மணி நேர மும்முர விவாதத்திற்குப் பின் தினகரனுக்கு ஆப்பு வைத்த அதிமுக அமைச்சர்கள்!
அதிமுக தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து சசிகலா, டிடிவி தினகரன் குடும்பத்தினரை கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
சென்னை: டிடிவி தினகரன் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவு எடுத்துள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு பின்னர் இதனை அவர் தெரிவித்தார்.
சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி சோதனை, இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் அளித்தது ஆகிய விவகாரங்கள் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் மீண்டும் இணைவதற்காக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வந்தன. இதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் கலந்து பேசத் தயார் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் தமிழக அமைச்சர்கள் திங்கட்கிழமை இரவு திடீர் ஆலோசனை மேற்கொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ''இரு அணிகள் இணைவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் கருத்து வரவேற்கத்தக்கது. ஒற்றுமையுடன் செயல்பட்டு இரட்டை இலை சின்னத்தை மீட்போம்'' என்றார்.
இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி, அன்பழகன், சி.வி.சண்முகம், பெஞ்சமின், ஆர்.பி. உதயகுமார் மற்றும் எம்.பி. வைத்திலிங்கம் ஆகியோர் இந்த ஆலோசனையில் கலந்துகொண்டனர்.
சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த நிதி அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரையும், அவர்களின் குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் 2 மணிநேரமாக ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.