தினகரனின் விஸ்வரூபத்தை நினைத்து சிறையில் கதறி அழுத சசிகலா!
பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் அண்மையில் சந்தித்துள்ளார். இச்சந்திப்பின் போது தினகரன் நடவடிக்கைகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தினாராம் சசிகலா.
சென்னை: பெங்களூரு சிறையில் தம்மை சந்தித்த தமிழக போலீஸ் உயர் அதிகாரியிடம் தினகரனின் நடவடிக்கைகள் குறித்து புலம்பி அழுதாராம் சசிகலா. போலீஸ் உயர் அதிகாரி திடீரென சசிகலாவை சந்தித்த தகவலால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ந்து போனார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட்டு பெங்களூருவில் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார் சசிகலா. அவர் சிறைக்கு சென்றபோது உறவினர்கள் தொடர்ந்து அவரை சந்தித்து வந்தனர்.
ஆனால் கடந்த சில நாட்களாக சசிகலாவை உறவினர்கள் யாரும் எட்டிப்பார்க்காமல் இருந்தனர். இந்த நிலையில் தமிழக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் சசிகலாவை திடீரென சிறையில் சந்தித்துள்ளார்.
வரவழைத்த சசி?
தமக்கு மிக விசுவாசமான அந்த அதிகாரியை சசிகலாதான் வரவழைத்ததாகவும் கூறப்படுகிறது. இச்சந்திப்பின் போது தினகரன், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரின் நடவடிக்கைகள் குறித்து அந்த போலீஸ் அதிகாரி விவரித்துள்ளார்.
தினகரனின் தனி ஆவர்த்தனம்
மேலும் அதிமுகவையும் ஆட்சியையும் தம் வசமாக்கிக் கொள்ள தினகரன் படுதீவிரமாக முயற்சிக்கிறார்; அவருக்கு ஒரு நால்வர் அணி உருவாக்கப்பட்டு அவர்களது தூபத்தை நம்பி அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார் என கூறியுள்ளார்.
கண்ணீர்விட்ட சசி
தினகரன் மீது தாம் நம்பிக்கை வைத்திருந்ததாகவும் இப்போது தம்மையே ஓரம்கட்டுவதில் முனைப்பாக இருப்பதையும் குறிப்பிட்டு பேசிய சசிகலா திடீரென மனம் உடைந்து கண்ணீர்விட்டு அழுதாராம். அத்துடன் தினகரன், எடப்பாடி பழனிச்சாமியை தொடர்ந்து கண்காணிப்பது குறித்தும் சில வியூகங்களை குறிப்பிட்டு சொல்லி அனுப்பியிருக்கிறாராம் சசிகலா.
எடப்பாடி ஷாக்
சசிகலாவுடனான இந்த அதிகாரியின் சந்திப்புதான் தலைமைச் செயலக வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக ஓடுகிறது. போலீஸ் அதிகாரியின் இந்த திடீர் சந்திப்பு குறித்து கேள்விப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரொம்பவே அதிர்ந்தும் போனார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.