இது பாரத ஸ்டேட் வங்கியா இல்லை "சேட்டு" வங்கியா.. மக்களிடம் ரூ.235 கோடி அபராதம் வசூல்!
சென்னை: வங்கிக் கணக்கில்குறைந்தபட்ச இருப்பை வைக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து முதல் காலாண்டு பகுதியில் அபராதமாக ரூ.235 கோடியை பாரத ஸ்டேட் வங்கி வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் பெரு நகரத்தில் வசிக்கும் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச வைப்புத் தொகையாக 5000 ரூபாயை வைத்திருக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் நகரங்களில் வாழ்பவர்கள் 3000 ரூபாயும், சிறுநகர்களில் வசிப்போர் 2000 ரூபாயும், கிராமப்புறங்களை சேர்ந்த வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 1000 ரூபாயையும் வைப்புத் தொகையையும் வைத்திருக்க வேண்டும் என்று ஸ்லாப் நிர்ணயித்திருந்தது.
அவ்வாறு இருப்பு இல்லாவிட்டால் அபராதம் வசூலிக்கப்படும் என்று அதற்கும் சில ஸ்லாப்களை வைத்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இந்த நிதியாண்டின் முதல் காலாண்டு காலத்தில் குறைந்தபட்ச இருப்பு வைக்காததால் அபராதமாக பெற்ற தொகை குறித்து வெளியிட தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி ஒருவர் மனு தாக்கல் செய்தார்.
அதற்கு பாரத ஸ்டேட் வங்கி பதிலளிக்கையில், மொத்தமுள்ள 388.74 லட்சம் வாடிக்கையாளர்களில் நாங்கள் நிர்ணயித்த குறைந்தபட்ச இருப்பை வைத்திருக்காதவர்களிடம் இருந்து ரூ.235.06 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த விவரத்தை மும்பை வங்கிகள் இயக்கத் துறையின் துணை பொது மேலாளர் அளித்துள்ளார். ஏற்கெனவே ஏழைகளாக உள்ளவர்கள் குறைந்தபட்ச இருப்பை வைக்க இயலாததால் அவர்கள் மேலும் ஏழைகளாகியுள்ளனர். அவர்களிடம் இருந்து அபராதம் விதித்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது ஸ்டேட் வங்கியா இல்லை சேட்டு வங்கியா என்று மக்கள் குமுறுவதில் என்ன தப்பு இருக்கு பாஸ்!












Click it and Unblock the Notifications