ஜெயலலிதாவுக்கு ஜாமீன் நீட்டிப்பு: கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மேலும் நான்கு மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதற்கு, சென்னையில் அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் 27ஆம் சிறையில் அடைக்கப்பட்டார். அக்டோபர் 18ஆம் தேதி உச்சநீதிமன்றம் நால்வருக்கும் ஜாமீன் வழங்கியது.
டிசம்பர் மாதம் 18ஆம்தேதிக்குள் மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களை கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்ய வேண்டும் என்றும், மீண்டும் டிசம்பர் 18ஆம்தேதி இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து அறிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் கடந்த 8-ந்தேதி பெங்களூர் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு தொடர்பான ஆவணங்களையும், நகல்களையும் தாக்கல் செய்தனர்.
அந்த ஆவணங்கள் லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்டதாக உள்ளது. அந்த ஆவணங்கள் மொத்தம் 686 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா தொடர்புடைய ஆவணங்கள் 174 பகுதிகளாக உள்ளது. சசிகலா, சுதாகரன் தொடர்புடைய 171 பகுதிகள், இளவரசி தொடர்புடைய 170 பகுதிகள் தனித்தனியாக உள்ளன.
ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டு விட்டதால் உடனே மேல்முறையீட்டு விசாரணையைத் தொடங்க வேண்டும் என்று ஜெயலலிதா சார்பில் சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நாடினார்கள். ஆனால் அதை உச்சநீதிமன்றம் ஏற்கவில்லை. 18ஆம்தேதி தான் விசாரணை நடத்தப்படும் என்று நீதிபதிகள் அறிவித்தனர். அதன்படி ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து காலை முதலே கோவில்களில் அதிமுகவினர் குவிந்தனர். ஆலயங்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
விசாரணைக்குப் பின்னர் ஜெயலலிதா மற்றும் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரது ஜாமீன் காலத்தை மேலும் 4 மாதங்களுக்கு நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தகவல் அறிந்த உடன் அதிமுகவினர் உற்சாகத்தில் இனிப்புகளை பகிர்ந்து கொண்டனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், முண்டகக்கன்னியம்மன் கோவில்களில் சிறப்பு அன்னதானமும் அதிமுகவினர் சார்பில் வழங்கப்பட்டது.