சிதம்பரம் நடராஜர் கோயில் உண்டியல் பணத்தை தீட்சிதர்களிடம் ஒப்படைக்கும் தமிழக அரசு!
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் மூலம் கிடைத்த பணம், உச்ச நீதிமன்ற உத்தரவுபடி பொதுதீட்சிதர்கள் வசம் இந்து அறநிலையத் துறையினர் அக்டோபர் 7 ஆம் தேதி ஒப்படைக்க உள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயிலை சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி இந்து அறநிலையத் துறை கடந்த 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி கையகப்படுத்தி புதிய நிர்வாக அலுவலரை நியமித்தது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 5ஆம் தேதி சித்ரசபை எதிரே முதல்முதலாக உண்டியல் வைக்கப்பட்டது. அதன் பின்னர் படிப்படியாக கோயிலில் பல்வேறு இடங்களில் மொத்தம் 9 உண்டியல்கள் வைக்கப்பட்டன. இரண்டு பிரசாதக் கடைகள் திறக்கப்பட்டன.
கோயிலில் இதுவரை இந்து அறநிலையத் துறையினரால் 23 முறை உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டத்தில் மொத்தம் ரூ.1 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரத்து 99 காணிக்கையாக கிடைத்துள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் பொதுதீட்சிதர்கள் தொடுத்த வழக்கில் கடந்த ஜனவரி 6ஆம் தேதி, நடராஜர் கோயிலை பொதுதீட்சிதர்களே நிர்வகிக்கலாம் என தீர்ப்பளித்ததை அடுத்து, கோயில் முழு நிர்வாகத்தையும் பொதுதீட்சிதர்கள் ஏற்றனர்.
இதனையடுத்து கோயிலுக்குள் வைக்கப்பட்டிருந்த 9 உண்டியல்கள் மற்றும் பிரசாதக் கடைகளை அகற்றி, அத்தொகையினை பொதுதீட்சிதர்களிடம் வழங்க செப்டம்பர் 19ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த 1ஆம் தேதி கோயிலில் இந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் சி.ஜோதி, செயல்அலுவலர் க.முருகன் மற்றும் பொதுதீட்சிதர்களின் செயலாளர் ரா.பாஸ்கர தீட்சிதர் ஆகியோர் முன்னிலையில் 6 உண்டியல்கள் அகற்றப்பட்டு, திறந்து எண்ணப்பட்டன. அதில் ரூ.11 லட்சத்து 72 ஆயிரத்து 188 காணிக்கையாக கிடைத்தது. மேலும், உண்டியலில் 32 கிராம் தங்கமும், 52 கிராம் வெள்ளியும் இருந்தன.
வரும் 7ஆம் தேதி உண்டியல் தொகை, பிரசாதக் கடை ஏலத்தொகை உள்ளிட்ட அனைத்துத் தொகைகள் மற்றும் பொருள்களை கோயில் பொதுதீட்சிதர்களிடம் இந்து அறநிலையத் துறையினர் ஒப்படைக்க உள்ளனர்.