பள்ளிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவு
சென்னை: பள்ளிகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வி இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:
அண்மையில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், வெள்ள நீர் சூழ்ந்துள்ள பள்ளிகளில் மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி அதிகாரிகளுடன் இனைந்து வெள்ள நீரை வெளியேற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி வளாகம், வகுப்பறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும். சுவிட்ச் போர்டில் உள்ள சுவிட்சிகள் அனைத்தும் சரியாக உள்ளனவா என ஆய்வு செய்து சேதமடைந்த சுவிட்சுகளை உடனடியாக மாற்ற வேண்டும். மேற்கூரைகள் சரியாக உள்ளதா, மின் இணைப்புகள் சரியாக உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும்.
நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளையும் சுத்தம் செய்து, தேங்கியுள்ள குப்பைகளை முறையாக குப்பைத் தொட்டிகளை வைத்து குப்பைகள் அகற்றப்பட வேண்டும். சுற்று சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதால் மாணவர்களை அதன் அருகே செல்ல அனுமதிக்கக் கூடாது. என்பன உள்ளிட்ட அறிவுரைகளை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.