அந்தியூரில் பரவும் மர்மக்காய்ச்சலுக்கு சிறுமி பலி... மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகைப் போராட்டம்
அந்தியூரில் சிறுமி திவ்யதர்ஷினி மர்மக் காய்ச்சலுக்கு பலியானதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ஈரோடு: அந்தியூர் தனியார் மருத்துவமனையில் பள்ளிச் சிறுமி மர்மக் காய்ச்சலால் உயிரிழந்ததால், அந்த மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அந்தியூரைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மகள் திவ்யதர்ஷினி மூன்றாம் வகுப்புப் படித்து வந்தார். அவருக்கு நான்கு நாட்களாக கடும் காய்ச்சல் இருந்ததால், அவரை அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மருத்துவமனையில் அதிக பணம் வாங்கிக் கொண்டு திவ்யதர்ஷினிக்கு மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே உயிர் இழந்தார். இதனால், கடும் கோபமடைந்த விஜயனின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் பல இடங்களில் டெங்கு, ஜிகா வைரஸ் உள்ளிட்ட பல்வேறுவிதமான காய்ச்சல் பரவி வருகிறது. உயிர் பலியான பின்பே சுகாதாரத்துறை அதிகாரிகள் அங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால், காய்ச்சல் பரவுவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.