கனமழை எச்சரிக்கை... சென்னை உள்பட 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் சென்னை உள்பட 10 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 30-ஆம் தேதி தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. மேலும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்று முதல் இரு நாள்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 8 மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிவித்தது.
இதனிடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானால் மேலும் மழை நீடிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் 30-ஆம் தேதியான நேற்று அதிகாலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பேய் மழை கொட்டியது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டியது. இதனால் பள்ளிகளுக்கு விடப்படும் நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக குழந்தைகளை வீட்டுக்கு அனுப்புமாறு சென்னை, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் நேற்று அறிவித்தனர்.
இந்நிலையில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து சென்னை, காஞ்சி, திருவள்ளூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 9 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கே சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.