பன்றிக்காய்ச்சலுக்கு ஆசிரியர் மரணம், வைரஸ் காய்ச்சலுக்கு மாணவன் பலி.. சேலத்தில் பீதி
சேலம்: சேலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு அரசு பள்ளி ஆசிரியர் ஜாகீர் உசேன் உயிரிழந்துள்ளார். பெரம்பலூரில் பள்ளி மாணவர் ஒருவர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளார்.
உயிரிழந்த ஜாகீர் உசேன் சேலம் அம்மாப்பேட்டை மாருதி நகரைச் சேர்ந்தவர் ஆவர். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த ஒருவாரமாக கடுமையான காய்ச்சலினால் அவதிப்பட்டு வந்த அவர் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இன்று காலையில் சிகிச்சை பலனின்றி ஜாகீர் உசேன் உயிரிழந்துள்ளார்.
இதனிடையே பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவன் சதீஷ் வைரஸ் காய்ச்சலால் உயிரிழந்தார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஒருவித காய்ச்சலால் அவதியுற்று வந்த மாணவர், மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மாணவன் சதீஷ், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவர் நிமோனியாவால் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாணவனின் உறவினர்கள் டெங்கு காய்ச்சலால்தான் சதிஷ் உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். இதேபோல் நாரணமங்கலம் அருகேயுள்ள மருதடியைச்சேர்ந்த நான்கு வயது மாணவி ரோஷினி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.