இளைஞர்கள் மீண்டும் கூடுவதாக கூறி மெரினாவில் 15 நாட்களுக்கு 144 தடை- இன்று முதல் பிப்.12 வரை அமல்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மீண்டும் ஒன்று கூடுவதாக கூறி அப்பகுதியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை சென்னை போலீசார் விதித்துள்ளனர். சனிக்கிழமை நள்ளிரவு முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை இத்தடை உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு புரட்சி அலங்காநல்லூரில் தொடங்கினாலும் சென்னை மெரினாவில் அது மையம் கொண்டிருந்தது. பல லட்சக்கணக்கான இளைஞர்கள், மெரினாவில் ஒன்று திரண்டு 6 நாட்களாக வரலாறு காணாத யுகப் புரட்சியை நடத்தினர்.

இப்புரட்சியின் விளைவாக ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இப்போராட்டத்தின் முடிவில் போலீசார் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். ஆனால் சென்னை போலீசார் இதை மறுத்து வீடியோ ஆதாரங்களை வெளியிட்டனர்.
இந்த நிலையில் இளைஞர்கள் மீண்டும் மெரினாவில் ஒன்று கூட உள்ளதாக கூறி அங்கு 600க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டு வந்தனர். தற்போது மெரினாவில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெருநகர தெற்கு கூடுதல் ஆணையர் சங்கர் கூறியதாவது:
மெரினாவில் இளைஞர்கள் நாளை மீண்டும் கூட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனால் மெரினாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது.
மெரினாவில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் பொழுது போக்கு, சுற்றுலாவுக்காக வருவோருக்கு தடை இல்லை. ஆனால் போராட்டம், பேரணி, மனித சங்கிலி, ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை இன்று நள்ளிரவு முதல் பிப்ரவரி 12-ந் தேதி வரை அமலில் இருக்கும்.இவ்வாறு கூடுதல் ஆணையர் சங்கர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications