ஜாமீனில் வெளியே வந்துள்ள சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை துருவி, துருவி விசாரணை! மீண்டும் கைது?
அமலாக்கத்துறை விசாரணையால், சேகர் ரெட்டி இன்று மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
சென்னை: ஜாமீனில் வெளியே வந்துள்ள தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக 34 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுகளைப் பதுக்கிவைத்திருந்ததாக போயஸ் இல்லத்திற்கு நெருக்கமானவராக அறியப்படும், தொழிலதிபர் சேகர் ரெட்டி மற்றும் அவரின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ கைதுசெய்தது.
சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய மூவருக்கும் கடந்த மார்ச் 17ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் சிறையிலிருந்து வெளியே வந்தனர்.
இந்நிலையில், இன்று திடீரென சேகர் ரெட்டியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சென்னை, கிரீம்ஸ் சாலையில் உள்ளது அமலாக்கத்துறை அலுவலகம். இங்கு சேகர் ரெட்டியை வரவழைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரிடம் காலை முதல் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
அமலாக்கத்துறை விடாப்பிடியாக நடத்தி வரும் விசாரணை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேகர் ரெட்டி இன்று மீண்டும் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.