என்னோட கருத்தை தப்பா புரிஞ்சுகிட்டாங்களே!... நானாவது அப்படி சொல்வதாவது!!... செல்லூரார் அந்தர் பல்டி
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை குறித்து தான் கூறிய கருத்து திரித்து கூறப்பட்டுவிட்டதாக அமைச்சர் செல்லூர் ராஜூ திடீர் பல்டி அடித்துள்ளார்.
Recommended Video

மதுரை: அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை இருந்தால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று நான் சொல்லவே இல்லை என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
அதிமுக சார்பில் கடந்த 29-ஆம் தேதி முதல் அதிமுகவுக்கு உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி ஆங்காங்கே உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் மதுரையில் அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சியை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில் , அதிமுக உறுப்பினர்தான் நமக்கு அத்தாட்சி. அந்த கார்டு என்பது உயிர் போன்றது. இந்த கார்டை அதிமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.
இந்த கார்டு இருந்தால் மட்டுமே அரசாங்க உதவிகள் உள்பட எந்த ஒரு உதவியையும் நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ பெற முடியும் என்பதை உறுதியாக கூறிக் கொள்கிறேன். அரசாங்கத்தின் மூலம் உதவி பெற வேண்டுமானால் இந்த கார்டு இருந்தால்தான் முடியும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் அரசின் மானிய விலையிலான இருசக்கர வாகனம் பெறுவதற்கும் அதிமுக அடையாள அட்டை முக்கியம் என்று அவர் கூறியதாகவும் கூறப்படுகிறது. அரசின் நலத்திட்ட உதவிகளை பெற அதிமுக உறுப்பினர் அட்டை முக்கியமல்ல என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெளிவுப்படுத்திவிட்டார்.
இந்த நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் செல்லூர் ராஜூ கூறுகையில் அதிமுக அடையாள அட்டை இருந்தால்தான் அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் என்று நான் சொல்லவே இல்லை. நான் கூறிய கருத்து ஊடகங்களில் திரித்து கூறப்பட்டுவிட்டது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications