தீ வேகத்தில் அதிமுக இணைப்பு வேலை.. ஓபிஎஸ்ஸுடன் பேச 10 பேர் குழு.. எடப்பாடியுடன் செங்ஸ் ஆலோசனை!
ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சென்னை: அதிமுக அணிகள் இணைவது குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுக இரு அணிகளாக உடைந்தது. இதனால் பங்காளிகளாக இருந்தவர்கள் கூட பகையாளிகளாக மாறினர். ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டினர்.

கட்சி, சின்னம்
இந்த சூழ்நிலையில்தான் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் யார் உண்மையான அதிமுக, இரட்டை இலை யாருக்கு என்ற சிக்கல் எழுந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் இருவரும் முட்டி மோதவே இரட்டை இலை சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம் அதிமுகவையும் முடக்கியது. கட்சி, சின்னம் எதுவும் இல்லை என்ற உடன் அதிகம் பாதிக்கப்பட்டது தொண்டர்கள்தான்.

இணைய முடிவு
இரு அணிகளும் இணைய வேண்டும், சசிகலா குடும்பத்தை விரட்ட வேண்டும் என்பதே அதிமுக தொண்டர்களின் கோரிக்கையாக உள்ளது. இதை உணர்ந்துதான் இப்போது முக்கிய அமைச்சர்கள் பேச தயாராக இறங்கி வந்துள்ளனர். அமர்ந்து பேச தயார் என்று ஓபிஎஸ் கூறியதற்கு வரவேற்பு தெரிவித்த கையோடு அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

10 பேர் கொண்ட குழு
நேற்றிரவு தங்கமணி தலைமையில் முக்கிய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் பேச 10 பேர் கொண்ட குழுவை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பேச அமைத்துள்ளனர். இந்த குழுவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே எம்எல்ஏக்கள் அனைவரும் ஐஎன்எஸ் போர்க்கப்பலை பார்வையிட்டு வரும் நிலையில் இரு அணிகளுடன் இணைவது குறித்தும் பேசி வருவதாக தெரிகிறது.

செங்கோட்டையன் ஆலோசனை
இந்த சூழ்நிலையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் அவருடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் முக்கிய ஆலோசனை நடத்தினர். அப்போது ஓபிஎஸ் அணியுடன் இணைவது பற்றி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்திய அவர்கள் உடனடியாக டிடிவி தினகரன் வீட்டிற்குச் சென்றனர். நேற்றிரவு நடைபெற்ற ஆலோசனை, குழு அமைக்கப்பட்டது பற்றி டிடிவி தினகரனுடன் விவாதித்து வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications