அதிமுகவில் இருந்து செந்தில் பாலாஜி நீக்கம்? பழ.கருப்பையாவை தொடர்ந்து அடுத்த ஆப்பு!
சென்னை: முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் தொகுதி எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு விட்டதாக விடிய விடிய சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர் டுவிட்டர்வாசிகள். துறைமுகம் தொகுதி எம்.எல்.ஏ பழ.கருப்பையாவைத் தொடர்ந்து கரூர் எம்.எல்.ஏ செந்தில் பாலாஜியை நீக்கப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
கடந்த 2011 ம் ஆண்டு அதிமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தபோது, போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றவர் செந்தில் பாலாஜி. யாரும் அசைக்க முடியாத வகையில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக போக்குவரத்துறை அமைச்சராகவும் இருந்து வந்தார். ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமாகவும் செந்தில் பாலாஜி இருந்து வந்தார்.
மேலும், சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெற வேண்டும் என்று செந்தில் பாலாஜி பெரிய யாகமே நடத்தினார். கோயிலில் அங்கபிரதட்சணம் செய்து அமர்க்களப்படுத்தியதோடு, அம்மன் கோயிலில் காவடியும் எடுத்தார். ஓபிஎஸ்-க்கு பின் செந்தில் பாலாஜிதான் என்று ஒருகட்டத்தில் அதிமுகவினர் பேசும் வகையில் உச்சத்திற்கு சென்றார் பாலாஜி.
தமிழக அமைச்சரவையில் 4 ஆண்டுகாலமாக இலாகா மாற்றத்துக்குள்ளாகாமல் இருந்தவர் செந்தில் பாலாஜி. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்ற போது முதலமைச்சர் பெயர் பட்டியலிலும் இடம்பிடித்தவர். ஏறுமுகமாகவே இருந்த செந்தில் பாலாஜிக்கு திடீரென கடந்த ஆண்டு சரிவு ஏற்பட்டது. வழக்கில் இருந்து விடுதலையான ஜெயலலிதா, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் சர்வ வல்லமை படைத்தவராக அமர்ந்த உடன் முதலில் அட்டாக் செய்தது செந்தில் பாலாஜியைத்தான். கட்சிப்பதவி, அமைச்சர் பதவியையும் பறித்தார். அதுமுதலே செந்தில் பாலாஜி அதிமுக தலைமைக்கு வேண்டப்படாதவராக மாறிவிட்டார் என்கின்றனர் அதிமுகவினர்.
மாவட்ட செயலாளர், அமைச்சர் பதவி என அடுத்தடுத்து அதிரடியாக செந்தில் பாலாஜி முன்னேற்றம் கண்டவுடன் அதிமுக நிர்வாகிகளை ஓரம்கட்டிவிட்டு தமது குடும்பத்தினரை வளையமாக்கிக் கொண்டார் செந்தில் பாலாஜி என்பது நீண்டகால புகார். அதேபோல் அரவக்குறிச்சி தி.மு.க. எம்.எல்.ஏ.வான கரூர் கே.சி. பழனிச்சாமியுடன் சில வியாபார டீலிங்குகளையும் செந்தில் பாலாஜி வைத்ததாகவும் கூறப்படுகிறது.
தமிழக அளவில் ஏரியா கவுன்சிலரிலிருந்து, தமிழக முதல்வர் பதவிக்கு மட்டும் ஆசைப்பட்டதோடு, தான் தான் அடுத்த அ.தி.மு.க பொதுச்செயலாளர் என்ற நினைப்பை ஏற்படுத்திய காரணம், அ.தி.மு.க வில் நடக்கும் பிரச்சினைகளையும், திட்டங்களையும், கரூர் கே.சி.பி என்கிற கே.சி.பழனிச்சாமி மூலம் தி.மு.க விடம் தகவல் தெரிவித்தது, அ.தி.மு.க அடிப்படை உறுப்பினர்கள் மட்டம் வரை அனைவரையும் மதிக்காதது, என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் செந்தில் பாலாஜி மேல் எழுந்தது.
தம்பியின் செல்வாக்கு
ஒட்டுமொத்த கரூர் மாவட்டத்தை செந்தில் பாலாஜியின் தம்பி தனது 'கட்டுப்பாட்டில்' வைத்திருந்ததை அப்பகுதி அதிமுகவினர் நன்கு அறிவார்கள். ஆள் கடத்தல், நில அபகரிப்பு புகார்கள் விஸ்வரூபமெடுத்து நீதிமன்றம் வரை போயுள்ளது.. ஆனால் அசராத செந்தில் பாலாஜி அண்ட் குடும்பம் தங்களது 'வேட்டையை' தொடர்ந்தது. இது கரூர் அண்ணா தி.மு.க. நிர்வாகளிடையே மிகக் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ரூ. பத்தாயிரம் கோடி
ரூ.10 ஆயிரம் பணத்திற்காக கடன் கட்ட முடியாது நிலையில் ஊரைவிட்டு ஒடிய செந்தில் பாலாஜி, தற்போது ரூ 10 ஆயிரம் கோடி வந்தது எப்படி என பா.ம.க வை சார்ந்த மாநில துணை பொதுச்செயலாளர் பி.எம்.கே.பாஸ்கரன் கரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன் நடைபெற்ற பா.ம.க ஆர்பாட்டத்தில் அப்போதைய அமைச்சர் செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்து பேசினார்.
பொறுமை காத்த ஜெ.
தமிழக போக்குவரத்துறை அமைச்சராக கடந்த தி.மு.க ஆட்சியில் இருந்த கே.என்.நேருவுடம் இரகசியமாக மீட்டிங் நடத்தி வந்த அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் தகவலும், அ.தி.மு.க மட்டத்தில் மள மளவென பரவியது. இப்படி இருக்க கட்சி மேலிடமோ சற்று பொறுமை காத்தது.
பஞ்சரான பஸ்
அதற்கும் காரணம் இல்லாமல் இல்லை அதிமுகவில் செல்வாக்கு மிக்கவரின் நம்பிக்கையைப் பெற்ற காரணத்தாலேயே கடந்த 4 ஆண்டுகாலமாக எத்தனையோ அமைச்சரவை மாற்றங்கள், இலாகா மாற்றங்கள் நிகழ்ந்த போதும் போக்குவரத்துதுறையை லாவகமாக ஓட்டி வந்தார் செந்தில் பாலாஜி. நல்லா ஓடும் பஸ் என்றாலும் ஒருநாள் டயர் பஞ்சராகித்தானே ஆகவேண்டும்.
ஜெயலலிதா கறார்
மெட்ரோ ரயில் திட்டம் திறப்பு விழா நடைபெற்ற போது மேலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நீங்கள் அனுப்பிய அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், பணம் கைமாறியதை அந்த நிறுவனத்திரே, முதல்வரிடம் போட்டு கொடுத்தனர். இதெல்லாம் சேர்த்து வைத்துதான் அப்போது கரூரில் உள்ள மேலக்கரூர் பத்திரப்பதிவு அலுவலகத்தை முதல்வர் ஜெ அவர்கள் காணொலி காட்சி மூலம் திறக்க முடிவு செய்த போது, அங்கே செந்தில் பாலாஜி இருக்க கூடாது என்று கூறியதுடன் அடுத்த நாள் மெட்ரோ இரயில் திட்டத்தை திறக்கும் போது கூட அப்பேது அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வரக்கூடாது என்று கராராக முதல்வர் ஜெயலலிதா.
பதவி பறிப்பு
பஸ் டயர் பஞ்சராகி செட்டுக்கு வருவது போல அந்த நாளும் வந்தது கடந்த ஆண்டு ஜூலை 27-ம் தேதியன்று போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை முதல்வர் ஜெயலலிதா அதிரடியாக நீக்கியதோடு அவர் வகித்து வந்த கரூர் மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்து எக்.மினிஸ்டர் ஆக்கினார்.
புகார்கள் மீது விசாரணை
செந்தில் பாலாஜி மீது பேருந்துகளுக்கு ஜி.எஸ்.பி. கருவிகளை வாங்கியதில் முறைகேடுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன.. இதேபோல் சென்னை மெட்ரோ ரயில் பெட்டி தயாரிப்பில் தகிடுதத்தம் செய்ததாகவும் புகாரை தட்டிவிட்டனர். இப்படி செந்தில் பாலாஜியின் மேல் எழுந்த அடுக்கடுக்கான புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெறுகிறது.
அடங்காத ஆட்டம்
பதவி பறிப்பை மீறியும் கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அமைச்சர் என்று செந்தில் பாலாஜி கூறி வந்ததையும், கூறத்தவறும் அதிகாரிகளையும், அ.தி.மு.க வினரையும் கட்சி விட்டு நீக்கி விடுவதாக மிரட்டுவது, மேலிடம் வரை புகார் செல்லவும் இருந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் அரசின் திட்டத்தை செயல்படாத நிலைக்கு ஆக்கி வருவதையும், மாவட்ட ஆட்சியரை மதிக்காதது என பல்வேறு புகார்கள் எழ அ.தி.மு.க தலைமையும், பொதுச்செயலாளருமான ஜெ அவர்கள் கரூர் மாவட்ட செயலாளராக விஜயபாஸ்கரை நியமித்தார்.
உயிர்பலி
அ.தி.மு.க தலைமைகழகம் சார்பில் கரூருக்கு புதிய கட்டிடம் திறப்பு விழாவின் முதல் நாளில் ஒரு கூலி தொழிலாளி கட்சி கொடி நடும் போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். ஆனால் முதல்வர் ஜெ கொடுத்ததாக கரூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் ரூ 2 லட்சமும், மற்ற ஈமச்சடங்குகளையும் கரூர் நகர செயலாளர் வை.நெடுஞ்செழியன் தன் தலையில் இழுத்து போட்டு செய்துள்ளார். ஆனால் செந்தில் பாலாஜி தலைமை தாங்காதது தான் இந்த உயிர்பலிக்கு காரணம் எனவும், இதே செந்தில் பாலாஜி மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தால் இப்படி நடந்திருக்காது எனவும் அவரது ஆதரவாளர்கள் பொய் பிரச்சாரம் செய்தனர்.
கட்சியில் இருந்து நீக்கம்?
செந்தில் பாலாஜியின் அடிப்படை உறுப்பினர் பதவி விரைவில் தூக்கப்பட உள்ளதாகவும், இவரால் அதாவது செந்தில் குமார் என்கிற செந்தில் பலாஜியினால் பாதிக்கப்பட்டு தி.மு.க விற்கு சென்ற சின்னசாமியும், தே.மு.தி.க விற்கு சென்ற என்.எஸ்.கே எனப்படும் என்.எஸ்.கிருஷ்ணனும் விரைவில் அ.தி.மு.க வசம் இணைய உள்ளதாகவும் தகவல் தெரிய வந்துள்ளது.
|
டுவிட்டரில் பதிவு
செந்தில்பாலாஜிக்கு பதவி பறிபோனால் டுவிட்டர்வாசிகளுக்கு ஏன் கொண்டாட்டமோ தெரியவில்லை. நேற்று விடிய விடிய செந்தில்பாலாஜி நீக்கம் செய்யப்பட்டு விட்டதாக பதிவிட்டுள்ளனர். செந்தில்பாலாஜி நீக்கப்பட்டு விட்டதாக இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.