தனியாரிடம் தமிழகத்தையே இந்த அரசு எழுதி கொடுத்து விடும்... செந்தில் பாலாஜி தாக்கு
தமிழக அரசு மீது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையான விமர்சனம் வைத்துள்ளார்.
கோவை: கோவையில் குடிநீர் வினியோகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பது தவறானது என்றும் தனியார் நிறுவனங்களிடம் தமிழகத்தையே இந்த அரசு எழுதி கொடுத்துவிடும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கோவை கொடிசியாவில் அமுமுக சார்பா நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கான கால்கோள் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமுமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது-
ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் இந்த அரசால் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. ஆனால் மத்திய அரசின் அழுத்தம் காரணம் சென்னை சேலம் இடையே எட்டு வழி சாலை அமைக்கும் பணியில் மாநில அரசு தீவிரம் காட்டி வருகிறது.
மேலும் எட்டு வழி சாலை அமைக்கும் திட்டதிற்கான ஒப்பந்தத்தை எடப்பாடியின் உறவினருக்கு பெற்று தரவும் , அங்கு மலைகளில் உள்ள கனிமங்களை எடுக்கவுமே முதல்வர் ஆர்வம் காட்டி வருகிறார். கோவையில் குடிநீர் வினியோகிக்கும் பொறுப்பை தனியார் நிறுவனத்திற்கு கொடுப்பது தவறானது. தனியார் நிறுவனங்களுக்கு தமிழகத்தையே இந்த அரசு எழுதி கொடுத்துவிடும்.
உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல, நாடாளுமன்ற தேர்தலையும் சட்டமன்ற தேர்தலையும் அதிமுக அரசால் எதிர்கொள்ள முடியாது. உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல் இருப்பதற்கு திமுக வை காரணம் காட்டுவது தவறானது. உள்ளாட்சி தேர்தல் நடத்த எந்த தடையும் இல்லை. உள்ளாட்சி தேர்தல் நடக்கும் பட்சத்தில் அமுமுகதான் வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.