எம்ஜிஆர் சொத்தை நீதிபதி ஹரிபரந்தாமன் குழு நிர்வகிக்கலாம்... ஹைகோர்ட் உத்தரவு!
எம்ஜிஆரின் சொத்துகளை நீதிபதி ஹரிபந்தாமன் குழு நிர்வகிக்கலாம் என்று சென்னை ஹைகோர்ட் கூறியுள்ளது.
சென்னை : எம்ஜிஆரின் சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் குழுவிற்கு அனுமதி அளித்து சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டள்ளது.
மறைந்த முதல்வர் எம்ஜிராமச்சந்திரன் அறக்கட்டளைக்கு சொந்தமாக ராமாவரத்தில் காதுகேளாதோருக்கான பள்ளி, அடையாறு சத்யா ஸ்டுடியோவில் பெண்கள் கல்லூரி, ஆலந்தூர் பகுதியில் மார்க்கெட் கடைகள், தி நகரில் எம்ஜிஆர் நினைவிடம், விருகம்பாக்கத்தில் பல கோடி மதிப்பு கட்டிடம் என்று பல்வேறு சொத்துகள் உள்ளன.
எம்ஜிஆருக்கு வாரிசு இல்லை என்பதால் அவருடைய சொத்துகளை யார் நிர்வகிப்பது என்பதில் பிரச்னை எழுந்தது. எம்ஜிஆரின் அண்ணன் எம்ஜி சக்ரபாணியின் மகன்கள் மற்றும் ஜானகியின் அண்ணன் மகள்கடையே பிரச்னைகள் ஏற்பட்டது.
இதனையடுத்து ஜானகியின் அண்ணன் மகள் லதா ராஜேந்திரன் வாடகைதாரர் சாமிநாதன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை நீண்ட நாட்கள் நடைபெற்ற பின்னர் தனி நீதிபதி எம்ஜிஆர் அறக்கட்டளை சொத்துகளை நிர்வகிக்க நீதிபதி ஹரிபரந்தாமன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து லதா ராஜேந்திரன் இரண்டு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது ஹரிபரந்தாமன் சொத்துகளை நிர்வகிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையின் போது ஹரிபரந்தாமன் குழு தொடர்ந்து சொத்துகளை நிர்வகிக்க அனுமதி வழங்கப்பட்டு, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.