ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி பாலமேட்டில் கடையடைப்பு.... கருப்புச் சின்னம் அணிந்து போராட்டம்!
மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி கிராமத்தினர் ஒன்று கூடி கடையடைப்புப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் தமிழர்கள் பாரம்பரியமாக பல நூற்றாண்டுகளாக நடத்தி வரும் ஜல்லிக்கட்டு இந்த வருடம் நடைபெறுமா என்பது சந்தேகமாகியுள்ளது. இது மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போன அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் மற்றும் ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்டற்றை நடத்தி வரும் பிற பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டை நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் குவி்ந்து வருகின்றன. இதையடுத்து தமிழக அரசும் மத்திய அரசிடம் அவசர சட்டத்தைப் பிறப்பிக்க வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அலங்காநல்லூரில் கடையடைப்புப் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்றவை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல அலங்காநல்லூருக்கு அருகே உள்ள பாலமேட்டில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெறுகிறது.
ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தக்கோரி மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி பாலமேட்டில் இன்று 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.
ஹோட்டல்கள், டீக்கடைகள், காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் உள்ளிட்ட அனைத்து வர்த்தக நிறுவனங்களும் இன்று அடைக்கப்பட்டன. மேலும் கடைகள் முன்பு கறுப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.
கடையடைப்பு போராட்டத்துக்கு பாலமேடு கிராம பொதுமகாலிங்க சுவாமி மடத்துக்கமிட்டி நிர்வாகிகள் அழைப்பு விடுத்திருந்தனர். மாடு வளர்ப்போர்களும், மாடுபிடி வீரர்களும், கிராமமக்களும் சட்டைகளில் கறுப்பு சின்னம் அணிந்து இருந்தனர்.
தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய-மாநில அரசுகள் அனுமதி அளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். போராட்டத்தையடுத்து பாலமேடு முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.