திராவிட மாடலா? கேட்கவே ஒரு மாதிரி இருக்குல்ல.. அது தமிழ் வார்த்தையா? தமிழிசை செளந்தரராஜன் கிண்டல்
நெல்லை: "திராவிட மாடலா.. அது என்ன தமிழ் வார்த்தையா.. அதற்கு மாற்றாக நல்ல தமிழ் பெயரை வையுங்கள்" என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறினார்.
மேலும், தமிழக ஆளுநரின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, இன்னொரு ஆளுநர் குறித்து நான் மதிப்பீடு செய்வது சரியாக இருக்காது என்றும் அவர் பதிலளித்தார்.
மகாகவி பாரதியாரின் 141-வது பிறந்தநாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன், நெல்லை மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் இன்று தங்கினார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

"ஆக்கப்பூர்வமான ஆளுநர் நான்"
புதுச்சேரி ஆளுநராக பதவியேற்றது முதல் இங்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டு வருகிறேன். ஒரு துணைநிலை ஆளுநர் என்ற முறையில் புதுச்சேரி அரசுக்கு திணைாக செயல்பட்டு வருகிறேன். அரசுடன் எந்தக் காலத்திலும் பிணக்குடன் செயல்பட்டது கிடையாது. இணக்கமாகவே செயல்பட்டு வருகிறோம். குறிப்பாக, கொரோனா காலத்தில் 3 மாதங்கள் புதுச்சேரில் ஆளுநர் ஆட்சிதான் இருந்தது. அப்போது கொரோனா தடுப்பூசிகளை மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்ததை யாராலும் மறுக்க முடியாது.

தமிழக ஆளுநரின் செயல்பாடு..
தமிழக ஆளுநரின் செயல்பாடு குறித்து கேட்கிறீர்கள். இன்னொரு ஆளுநரின் செயல்பாடு குறித்து நான் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? அப்படி மற்ற ஆளுநர்கள் குறித்து பதவியில் இருக்கும் ஒரு ஆளுநர் மதிப்பீடு அறிக்கை தருவது சரியாக இருக்காது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அம்மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஒருவிதமான முயற்சிகளை செய்திருக்கலாம். நான் புதுவையில் வேறு மாதிரியான முயற்சிகளை செய்திருக்கலாம். அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

"அதற்குதானே அரசாங்கம் இருக்கிறது"
புயலை வெற்றிகரமாக சமாளித்துவிட்டோம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறுகிறார். புயலை வெற்றிகரமாக ஒரு அரசு சமாளித்துவிட்டது என்றால் அதில் அதிகாரிகள் மற்றும் மக்களின் பங்களிப்பும் இருக்கிறது. அதை யாரும் மறந்துவிடக் கூடாது. புயல் வருகிறது என்றால் அதில் இருந்து மக்களை காப்பாற்றுவதுதானே ஒரு அரசாங்கத்தின் கடமை? அதற்காகதானே அரசாங்கம் என்ற ஒன்று இருக்கிறது.

"அது என்ன திராவிட மாடல்?"
தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி திமுக தொண்டர்கள் வரை "திராவிட மாடல்", "திராவிட மாடல்" எனக் கூறுகின்றனர். அதை கேட்கவே ஒருமாதிரியாக இருக்கிறது. திராவிட மாடல் என்பது தமிழ் கிடையாது. ஆகவே, முத்தமிழ் அறிஞர் கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலின், அதற்கு மாற்றாக ஒரு நல்ல தமிழ்ப் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் என்பது எனது விருப்பம். இவ்வாறு தமிழிசை செளந்தர்ராஜன் கூறினார்.












Click it and Unblock the Notifications