பாடகர் திருவுடையான் சாலை விபத்தில் மரணம்.. எதார்த்த பாடல்களால் மக்களைக் கவர்ந்தவர்!
மதுரை: எதார்த்தமான பாடல்களாலும், தனது வெண்கலக் குரலாலும் மக்களைக் கவர்ந்த பாடகர் திருவுடையான் மதுரை அருகே நடந்த சாலை விபத்தில் இன்று காலை காலமானார்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் திருவுடையான். மக்களின் பாடகர் என்று அன்பாக அழைக்கப்பட்டவர். சேலத்தில் நேற்று இரவு நடந்த ஒரு கலை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது, மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகில் நின்றுகொண்டிருந்த லாரி மீது அவரின் குழுவினர் பயணித்த கார் மோதியது.
இதில் அந்த இடத்திலேயே திருவுடையான் உயிரிழந்தார். அவருடன் பயணித்த சகோதரர் ஒருவரும் ஓட்டுநரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறைந்த திருவுடையான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளராகப் பொறுப்பில் இருந்து வந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேடைகளிலும் தவறாமல் இவரது குரல் ஒலித்து வந்தது. மார்க்சிஸ்ட் கட்சியின் சங்கரன்கோவில் தாலுகா நிர்வாகியாகவும் இருந்தார் திருவுடையான்.
திருவுடையான் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். திருவுடையான், திரைப்படங்களிலும் கூட பாடியுள்ளார்.
தங்கர் பச்சான் இரங்கல்
திருவுடையான் மறைவு குறித்து இயக்குநர் தங்கர் பச்சான் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தமிழிசையோடு ஒலித்த தமிழனின் வெண்கலக்குரல் மறைந்தது! தோழர் திருவுடையான் நான் இயக்கி வெளியாகக் காத்திருக்கும் களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் பாடிய காலத்தை வெல்லும் பாடல். இன்னொரு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று கூறியுள்ளார் தங்கர் பச்சான்
தங்கர் பச்சான் படத்தில் திருவுடையான் பாடியுள்ள பாடல் இணைப்பு: