அதிமுகவினர் வெடித்த பட்டாசில் தீப்பிடித்து எரிந்த கோவில் கோபுரம்.. கிராமமே கூடி உண்ணாவிரதம்
சிவகங்கை: அதிமுகவினர் வெடித்த பட்டாசால் தீப்பிடித்து சேதாரமடைந்த கோவில் கோபுரத்தை சரி செய்து தர வேண்டும், தீ விபத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி இன்று காளையார்கோவில் கிராமத்தார் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா. நேற்று அவருக்கு ஜாமீன் தர இயலாது என பெங்களூர் நீதிமன்றம் தெரிவித்தது.
ஆனால், முன்னதாக ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைத்து விட்டதாக தவறான தகவல் பரவியது. இதனால் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அவ்வாறு அதிமுகவினர் வெடித்த பட்டாசின் நெருப்புப் பட்டு சிவகங்கை மாவட்டம், பிரபலமான காளையார் கோவில் சொர்ணகாளீஸ்வரர் கோவில் கோபுரங்களில் தீப்பிடித்தது. திருப்பணிக்காக வேயப்பட்டிருந்த கூரை மீது நெருப்பு பட்டதால், தீ மளமளவென பரவியது.
அதிர்ஷ்டவசமாக அப்போது திடீரென பெய்த மழையால் தீ ஓரளவு தணிந்தது. அதற்குள்ளாக தீயணைப்புத்துறை வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கோவிலின் இரு கோபுரங்களிலும் மாடி கதவு நிலைகள் மற்றும் சிறிய சாமி பொம்மைகள் எரிந்தன.
இதனால், ஆத்திரமடைந்த காளையார் கோவில் கிராம மக்கள் அதிமுகவினரின் இந்த செயலைக் கண்டித்து இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அதிமுகவினரை கண்டித்து அவர்கள் கோஷம் எழுப்பினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கிராம அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து அதிமுக அதிமுக மாவட்டச் செயலாளரும், சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி எம்பி பி.ஆர்.செந்தில்நாதனும் வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தீ விபத்தில் சேதம் அடைந்த பகுதிளை சரிசெய்வதற்கான செலவுகளை அதிமுகவினர் ஏற்கவேண்டும் எனவும், இந்த தீ விபத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவர்களிடம் வலியுறுத்தினர்.
தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுவதால், காளையார் கோவில் பகுதியில் பாதுகாப்பிற்கு அதிகளவில் போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.