லீவு போட்ட 6 வயது மாணவியின் கையை முறுக்கி உடைத்த வகுப்பு ஆசிரியர்
தஞ்சை: தஞ்சாவூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் வகுப்பாசிரியர் தண்டனை அளிக்கிறேன் என்ற பெயரில் முதலாம் வகுப்பு மாணவியின் இடது கையை பிடித்து முறுக்கியதில் தோள்மூட்டு எலும்பு நகர்ந்துவிட்டது.
தஞ்சாவூரில் உள்ள பஞ்சாயத்து யூனியன் துவக்கப் பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வருபவர் வி. தேவி(6). அவர் தனக்கு உடல்நலம் சரியில்லாததால் திங்கட்கிழமை பள்ளிக்கு செல்லவில்லை. மறுநாள் பள்ளிக்கு சென்ற அவருக்கு திடீர் என்று விடுப்பு எடுத்ததற்காக வகுப்பு ஆசிரியர் பாபு தண்டனை அளித்துள்ளார்.
அவர் தேவியின் இடது கையை பிடித்து முறுக்கியதில் தோள்மூட்டு எலும்பு நகர்ந்துவிட்டது. தேவி பள்ளியில் அன்றைய தினம் வலி தாங்க முடியாமல் அழுது கொண்டே இருந்திருக்கிறார். இதனால் மாலையில் 1 மணிநேரத்திற்கு முன்பாகவே தேவியை வீட்டிற்கு அனுப்பியுள்ளனர்.
அவரது தாய் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது தேவி அழுவதை பார்த்து விபரம் கேட்டார். உடனே அவர் பந்தலூர் காவல் நிலையத்திற்கு சென்று ஆசிரியர் பாபு மீது புகார் அளித்தார். மறுநாள் காலையில் தேவியின் கை வீங்கியதையடுத்து அவரை அவரது தாய் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தேவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தோள்மூட்டு எலும்பு நகர்ந்துள்ளதாக தெரிவித்து அதற்கான சிகிச்சை அளித்தனர்.












Click it and Unblock the Notifications