ரூபாய் நோட்டு தட்டுப்பாடு.. அடித்தட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு- சிறு வியாபாரம் முடங்கியது
சில்லறை பிரச்சினை சிறு வியாபாரிகளின் இயல்பு வாழ்க்கையை அடியோடு முடக்கியுள்ளது. 9 வது நாளாக மக்கள் பணத்திற்காக அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை: 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் சிறு வியாபாரிகளின் வாழ்க்கை அடியோடு முடங்கியுள்ளது. 9வது நாளாக சில்லறை பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் செல்லாத 500, 1000 ரூபாயை மாற்ற வங்கி வாசலிலும், ஏடிஎம்மில் பணம் எடுக்கவும் மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
கோயம்பேடு சந்தை வளாகத்தில் மலர், காய், கனி விற்பனைக்காக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த சந்தைக்கு தினமும் 50 ஆயிரம் பேர் வந்து செல்வது வழக்கம். ஆனால், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, சில்லறை நோட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் வரத்து 80 சதவீதம் குறைந்து, சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் ஒரு வாரத்திற்கும் மேலாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் கூறியுள்ளனர்.
கோயம்பேட்டில் உள்ள 486 மலர் அங்காடியில் ஒவ்வொரு கடையிலும் சாராசரியாக ரூ.10 ஆயிரம் வரை விற்பனை செய்த கடைகளில் தற்போது ரூ.2,500க்கு கூட விற்பனையாவதில்லை. இதனால் வியாபாரிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக கூறுகின்றனர்.
835 பழக் கடைகள் உள்ளன. இங்கு பல கடைகளில் நாள்தோறும் ரூ.4 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும். இப்போது ரூ.50 ஆயிரம்கூட விற்பனையாகவில்லை. இதனால் சந்தை வியாபாரிகள் வருவாய் இழந்துள்ளதாக கூறப்படுகிறது. பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த அளவிற்காவது விற்பனை நடக்கிறது என்கின்றனர்.
காய்கறி சந்தையில் தினந்தோறும் 4 கோடி ரூபாய் முதல் 7 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும். சில்லறை தட்டுப்பாடு காரணமாக தற்போது ரூ.1 கோடி அளவுக்கு கூட வியாபாரம் நடைபெறவில்லை. சிறு வியாபாரிகள் 500 மற்றும் 1000 ரூபாயை வாங்க மறுப்பதால் கடந்த ஒரு வாரமாக இங்கு விற்பனை 80 சதவீதம் சரிந்து, வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. காய்கறி விலையை குறைத்தும், வாங்க ஆளில்லை என்பதுதான் சோகம்.
தமிழகம் முழுவதும் அவசர தேவைக்காக நகையை அடகு வைத்து பணம் பெற முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தேசிய மற்றும் கூட்டுறவு வங்கிகளில் நகை அடகு வைத்தால் பணம் இல்லை என கூறுவதாக புகார் அளித்துள்ளனர். நகை அடகு வைக்க, பணம் மாற்ற, வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் தவிக்கின்றனர்.
ரூபாய் நோட்டுகள், சில்லறை தட்டுப்பாடு சென்னை புதுப்பேட்டையில் உள்ள வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகளில் 500 ரூபாய்க்கு கூட விற்பனை நடைபெறவில்லை. இதனால் மெக்கானிக்குகளுக்கு சம்பளம் கூட தரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பல மெக்கானிக்குகள் வேலையிழந்துள்ளனர். எப்போதும் கூட்டமாக காணப்படும் புதுப்பேட்டை இப்போது களையிழந்துள்ளது.