கெஜ்ரிவால் ஆகத் துடிக்கும் தமிழகத் தலைவர்கள்.. மக்கள் ஓட்டு யாருக்கோ?
சென்னை: டெல்லியில் பாஜக, காங்கிரஸ் கட்சிகளை மண்ணை கவ்வ வைத்து ஆம் ஆத்மி கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்க உள்ளார். டெல்லி அரசியலில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. திமுக தலைவரும் பழுத்த அரசியல்வாதியுமான கருணாநிதி தொடங்கி வைகோ, விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், ஜி.கே.வாசன் வரை அனைவரும் இந்த வெற்றியைப் பற்றி பேசி வருகின்றனர். அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.
முதல்வர் கனவில்
2016ஆம் ஆண்டு தமிழக முதல்வர் ஆகிவிட வேண்டும் என்ற கனவு .தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, ம.தி.மு.க., தலைவர் வைகோ, த.மா.கா., தலைவர் வாசன் என நீண்டு வரும் நிலையில் நாளைய முதல்வராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரமும் கனவு காண்கிறார். இதற்கு கட்டியம் கூறும் வகையில் அர்விந்த் கெஜ்ரிவாலின் வெற்றியை பாராட்டியுள்ளார் கார்த்தி.
அங்கேயே போகட்டும்
இதற்கு பதிலடி தரும் விதமாகவே கார்த்தி விரும்பினால் ஆம் ஆத்மி கட்சியில் இணையலாம் என்று குண்டு போட்டார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அவருக்கும் ஒரு ஓரத்தில் தமிழக முதல்வராக வேண்டும் என்று ஆசையிருக்காதா என்ன?
அரசியல் வியூகம்
ஆம் ஆத்மியின் வெற்றியால் வெலவெலத்துப் போயுள்ள நம்ஊர் அரசியல் தலைவர்கள் திடீர் உற்சாகத்துடன், சட்டசபை தேர்தலுக்கான அரசியல் வியூகத்தை வகுக்க துவங்கி விட்டனர். இதில் ஒவ்வொருவருக்கும், தன் தலைமையில் கூட்டணி ஏற்படுத்த வேண்டும்; முதல்வர் நாற்காலியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்துள்ளது.
கேப்டனின் ஆசை
தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில், தே.மு.தி.க.வை உருவாக்கினார் விஜயகாந்த். அரசியல் நெருக்கடி காரணமாக, அ.தி.மு.க.,வுடன் அக்கட்சி கூட்டு வைத்தது. அதன் தொடர்ச்சியாக, லோக்சபா தேர்தலில், பா.ஜ.கவின் அணியில் சேர்ந்தது. ஆனாலும், அக்கட்சி தலைவரின் முதல்வர் வேட்பாளர் ஆசை மாறவில்லை.
முதல்வர் வேட்பாளர்
அதிலும் தற்போது மாறியுள்ள அரசியல் சூழலில், விஜயகாந்தை முன்னிறுத்த, குட்டி கட்சிகள் சிலவும் தயாராக இருக்கின்றன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி, தே.மு.தி.க., தலைமையில் வலுவான ஒரு அணியை, சட்டசபைத் தேர்தலுக்கு தயார்படுத்துவது தான், எங்களது திட்டம் என்கின்றனர் அக்கட்சியினர்.
ஜி.கே.வாசனின்
இதே நிலைப்பாட்டை தான், புதியவரவான த.மா.கா.,வும் எடுத்துள்ளது. கம்யூனிஸ்ட்டுகள், தலித் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களை, தங்களுடன் அணி சேர்க்கும் நடவடிக்கையை வாசன் துவங்கியுள்ள வாசன், அதற்கு மேலும் வலுவூட்டுவதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தமாகவின் தலைமையில் மூன்றாவது பெரிய அணியாக உருப்பெறச் செய்ய வேண்டும் என்ற என்ற எண்ணத்திலும் வியூகம் அமைத்து வருகிறார் வாசன்.
முதல்வர் வேட்பாளர் அன்புமணி
லோக்சபா தேர்தலில் பா.ஜ.க அணியில் இருந்த பா.ம.க.,வும், இதே திட்டத்துடன் தான், ஸ்ரீரங்கத்தில் பா.ஜ.கவை ஆதரிக்க மறுத்தது. இப்போது, கட்சியின் இளைஞரணி தலைவரும், எம்.பி.,யுமான அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த, பா.ம.க., செயற்குழுவை சேலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி கூட்டியுள்ளனர்.
நாங்களும் சாதிப்போம்
ஆம் ஆத்மியின் வெற்றி அறிவுப்பு வந்த உடன் அறிக்கை வெளியிட்ட அன்புமணி, டெல்லியில் கெஜ்ரிவால் சாதித்ததைப் போல 2016ஆம் ஆண்டு தமிழகத்தில் நாங்கள் சாதிப்போம் என்று கூறியுள்ளார். சேலம் மாநாட்டில் ‘தமிழகத்தின் கெஜ்ரிவால்' ஆக அன்புமணியை முன்நிறுத்தப்போகிறார்களாம்.
ஜாதி ஓட்டுக்களுக்கு குறி
முழுநேர அரசியல்வாதியாக இல்லையென்றாலும் ஜாதி ரீதியான வாக்குவங்கிகளை குறிவைத்து கெஜ்ரிவால் காய் நகர்த்தி வெற்றி பெற்றுள்ளார் இதே முறையிலான அணுகுமுறையை பாமக கையிலெடுக்கும் என்று கூறப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக சமூக ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த இருக்கிறார் ராமதாஸ் என்கின்றனர்.
வைகோ-கெஜ்ரிவால்
இதேபோல கெஜ்ரிவால் வெற்றியை பாராட்டிய வைகோ, நேரடியாக தொலைபேசியிலும் பேசி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இவரது பாராட்டில் நெகிழ்ந்த கெஜ்ரிவால், ‘நாம் இணைந்து செயல்படுவோம்' என்று குறிப்பிட்டாராம். உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என்றும் கெஜ்ரிவால் கூறினாராம்.
பிப்ரவரி 25ல் சந்திப்பு?
நிலம் கையகப்படுத்துவது தொடர்பான மத்திய அரசின் சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 24ஆம் தேதி டெல்லியில் சமூக ஆர்வலர் மேதாபட்கருடன் இணைந்து நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளார் வைகோ. அந்த போராட்டம் முடிந்த மறுநாள், கெஜ்ரிவாலை சந்திக்க உள்ளதாக மதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இடைசால் ஓட்டும் கார்த்தி
இத்தனை முதல்வர் வேட்பாளர்க இருக்கையில், ஆம் ஆத்மி பெற்ற வெற்றி குறித்து, டுவிட்டரில் கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரம், தேவையில்லாமல், தமிழக காங்கிரஸ் தலைமையை விமர்சித்திருந்தார். 'ஆம் ஆத்மியிடம் இருந்து, தமிழக காங்கிரஸ் தலைமை பாடம் படிக்க வேண்டும்; அதுபோன்ற ஒரு தலைமை இங்கும் வேண்டும்' என, கூறியிருந்தார்.
ஏகே-67 போல ஜி-67
இனியும், தமிழக காங்கிரசையும், தேசிய தலைமையையும் நம்பி பயன் இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டார் கார்த்தி. அவரது தந்தை சிதம்பரமும் இதற்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாக கூறப்படுகிறது. படித்த இளைஞரான கார்த்தி தலைமையில், ஜி-67 அமைப்பை தொடர்ந்து நடத்திச் செல்வதன் மூலம், அவரை முதல்வர் வேட்பாளராக, முன்னிலைப்படுத்த முடியும். தெரிகிறது என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
இணைவரா சகாயம்?
ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்தை ஆம் ஆத்மி கட்சியில் இணையவைத்து, தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக்கவும் சிலர் முயற்சி செய்து வருகின்றனராம். அடுத்து வரும் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க தேமுதிக, பாமாக, மதிமுக, தமாகா ஆசைப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவர்கள் ஆசையை அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கெள்ள வேண்டுமே என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அரசியலில் எதுவும் நடக்கலாம்... 2016 இதற்கு பதில் சொல்லும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
டெபாசிட் கிடைக்குமா?
அப்போ தமிழ்நாடு கெஜ்ரிவால் ரெடியாயிட்டார். அதெல்லாம் சரிதான், எதற்கும் வாங்கியே பழக்கப்பட்ட மக்கள் தமிழக கெஜ்ரிவாலுக்கு டெபாசிட்டாவது கொடுப்பார்களா என்பதுதான் ஊழல் அரசியல்வாதிகளின் கேலியான கேள்வியாக உள்ளது.