ஓட்டுப் போடனுமா ? கவலை வேண்டாம்.. சொந்த ஊர் செல்பவர்களுக்காக கூடுதல் பஸ்கள்
சென்னை: சென்னையில் வசிப்பவர்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டுப்போடுவதற்காக கூடுதலாக 100 தொலைதூர விரைவு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
தமிழகம்,புதுச்சேரி மற்றும் கேரளாவில் வரும் திங்கள்கிழமை சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குபதிவு இருக்க வேண்டும் என்பதற்காக, அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வலியுறுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு பிரசாரத்தையும் நடத்தி வருகிறது.
வாக்குப்பதிவு தினத்தன்று, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களில் பணியாற்றுவோரும் திரளாக வாக்களிக்க வேண்டும். ஐடி ஊழியர்களை வெளியூர்களுக்கு பணி நிமித்தம் அனுப்பி வைப்பதை நிறுவனங்கள் அன்றைய தினம் தவிர்க்க வேண்டும் என்றும் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சென்னையில் தங்கியிருக்கும் பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்கும் விதமாக சிறப்பு பேருந்து வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பதற்காக ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் கூட்டநெரிசலில் சிக்கி தவிக்காமல் குடும்பத்துடன் வசதியாக பயணம் செய்ய முடியும்.
தேர்தல் நடைபெறும் நாள் திங்கட்கிழமை என்பதால், அதற்கு முந்தைய இருநாட்களும் வாரவிடுமுறை என்பதால் சென்னையில் வசிப்பவர்களில் ஏராளமானோர் தங்களது ஊர்களுக்கு செல்வார்கள். தொலைதூரம் செல்லக்கூடிய விரைவு பஸ்களில் 13 மற்றும் 14-ந் தேதிகளுக்கான டிக்கெட் முன்பதிவு முடிவடைந்துவிட்டது.
இதையொட்டி ஒரு நாளைக்கு கூடுதலாக 100 தொலைதூர விரைவு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி, நாகர்கோவில், திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அதேபோல் கோவை, கும்பகோணம், மதுரை, சேலம், நெல்லை, விழுப்புரம் ஆகிய கோட்டங்களில் இருந்தும் தேவைக்கேற்ப 300 முதல் 400 சிறப்புப் பேருந்துகள் சென்னைக்கும், மற்ற நகரங்களுக்கும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பயணிகள் இதனை முறையாக பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.